இன்று பல தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு ஏன் தள்ளிப்போகிறது? காரணங்களும். தீர்வுகளும்.

0

பெரும்பாலும் இன்று ஆண்களும் பெண்களும் காலம் கடந்து திருமணம் செய்துகொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவு முறை, வாழ்வியல் முறை என்ற அனைத்தும் மாறிவிட்டது. அதனால் குழந்தையின்மை பிரச்சினை நம்முடைய முந்தைய தலைமுறைக்கு இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இன்று உள்ள அதிக எண்ணிக்கையில் இல்லை எனலாம். இன்று தோராயமாக நாற்பது விழுக்காடு அளவிற்கு இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது. இது இளம் தம்பதியரை மிகுந்த மன உளைச்சலுக்கும் பல குழப்பத்திற்கும், குடும்ப பிரச்சினைகளுக்கும் உட்படுத்தியுள்ளது.

சமீபத்தைய ஒரு ஆய்வில், இணையத்தில் தமிழ் மக்களில் அதிகம் பேர் தேடும் ஒரு பிரச்சினை குழந்தையின்மை என்பதால், இது குறித்து முழுமையான ஒரு கட்டுரையை கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முழுமையான தரவுகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. எனவே மேம்போக்காக இல்லாமல், சில மருத்துவர்களை சந்தித்து தேவையான தகவல்களைத் திரட்டி, இப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் சில தம்பதியர்களின் அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டு, மேலும் சம்பத்தப்பட்ட பல நூல்களை ஆராய்ந்து, சில இயற்கை வாழ்வியல் அறிஞர் பெருமக்களின் அறிவுரைகளை பெற்று இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம், மேலும் கேள்விகளை கேட்பதன் மூலம், நம் வாசகர்களின் அனைத்து ஐயங்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கும். எனவே, இது யாருடையா குறையும் இல்லை, இது இன்று அனைவராலும் சந்திக்கக் கூடிய ஒரு சிறிய சிக்கல். இதற்கான முழுமையான காரணத்தை அறிந்து அதை தீர்க்க இதற்கான முழுமையான காரணத்தை அறிந்து வாழ்க்கையில் குழந்தைச் செல்வங்களை பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் பணம் என்பது வாழ்க்கையின் போக்கை மற்றிவிட்டுள்ளது. முடிந்தவரை பெண்கள் முப்பது வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்வது அவர்கள் உடலுக்கும், சுக பிரசவத்திற்கும் நல்லது. காலம் கடந்தால் அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது மேலும் மருத்துவர்கள் அதிக கவனத்துடன் பிரசவத்தை கையாள நேரிடும். பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக,எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். இருப்பினும், தவர்க்க முடியாத காரணங்களால் முப்பது வயதைக் கடந்து குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் இதை நினைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பது என்பது பல காரணகளால் தள்ளிப்போகிறது. இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம், பணம் சம்பாதிக்கும் வேகம், இரவு பகல் பாராமல் உழைப்பது, உடலை கவனிக்காமல் இருப்பது, மடிக்கணினி பயன்படுத்துவது, இயற்கையாக ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ உடலில் உள்ள சில பிரசச்சினைகள், ஆண்களுக்கு குறைவான உயிரணுக்கள் எண்ணிக்கை, குறைவான் தூக்கம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருப்பை குழாய் அடைப்பு போன்ற பல காரணங்களால் இவை தள்ளிப்போகலாம். மாறியிருக்கும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், திருமணமான புதிதில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுதல், எல்லை மீறிய சட்டபூர்வ மற்றும் சட்ட விரோதமான கருக்கலைப்பு, பி.சி.டி. எனப்படும் “பாலிஸிஸ்டிக் ஓவரீஸ்’ குறைபாடு, உயிரணுக்களின் எண்ணிக்கையில் உள்ள குறைபாடு, வீரியமற்ற உயிரணுக்கள், பாதுகாப்பாற்ற முறையில் செய்து கொள்ளும் கருச்சிதைவு ஆகியவையும் குழந்தை தள்ளிபோவதற்கு காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

சரியான புரிதலும், அதை எவ்வித பதட்டமும் இன்றி அணுகும் பொறுமையும் இருந்தால் இதை முழுமையாக அறிந்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதை தக்க மருத்துவரால் ஓரளவு என்ன பிரச்சினை, அதை எப்படி சரி செய்வது என்பதை எளிதில் அறிந்துகொள்ளமுடியும்.

குழந்தை எதிர்ப்பார்க்கும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களை தொகுத்துக் கொடுப்பதே இக்கட்டுரையின் நோக்கம்:

1. முப்பது வயதிற்கு மேல் திருமணம் ஆனவர்கள் குழந்தைப்பெருவதை தள்ளிப்போடாமல் இருப்பது நல்லது. முப்பது வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் நிறைய சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.

2. குழந்தைப் பேரு மருத்துவரை அணுகி விட்டமின் மாத்திரைகளை வாங்கி தினமும் சாப்பிட்டு, மேலும் உடலுக்கு தேவையான சமச்சீர் உணவுகளை சாப்பிட்டு உடலை தயார் செய்ய வேண்டும். இது விதை விதைக்குமுன் நிலத்தை பக்குவப்படுத்துவது போன்றதாகும்.

3. தம்பதியர் காபி, டீ, புகைபிடித்தல், மது அருதுதல் போன்றவற்றை தவிர்க்கவேண்டும் அல்லது தள்ளிப்போட வேண்டும்.

4. இறுக்கமான உடைகளை அணிவதால் உயிரணுக்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு சொல்கிறது. ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

5. கால் மேல் கால் போட்டு உட்காருவதை தவிர்ப்பது நல்லது. உயிரணுக்கள் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இதை மரியாதைக்காக என்று ஒரு வாழ்வியல் தத்துவமாக நம் முன்னோர் சொல்லியுள்ளனர். அதன் உண்மையான பொருள் உயிரணுக்களை பாதிக்கும் என்பதே.

6. மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்தாதீர்கள்.

7. தேவையான அளவு தூக்கம் தேவை. அதிக இரவு வேலையை எடுத்துக்கொல்லாமல் இருப்பது நல்லது. குறைந்தது 6-8 மணி நேரம் தூக்கம் தேவை.

8. மன அழுத்தம், மன உளைச்சல் எதுவும் இல்லாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். முடிந்தவரை எந்தவித மன உளைச்சல் தரக்கூடியவற்றை இந்தக் காலக்கட்டத்தில் தவிர்ப்பது நல்லது. உதாரணத்திற்கு உடல் சோர்வை தரக்கூடிய கடன் வாங்குவது , வீடு கட்டுவது, வேலை மாறுவது, உறவுகளுக்குள் சிக்கல், நீண்ட பயணம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

9. சுடுநீரில் (Hot Water) குளிப்பதை குறைப்பது நல்லது. அல்லது அதிக சூடு இல்லாமல் குளிக்கலாம். இது உயிரணுக்கள் எண்ணிக்கையை மிகவும் பாதிக்கும்.

10.கோபம் வாக்குவாதம் போன்றவற்றை தவிர்த்து மனதை அமைதியாக வைத்திருக்கவேண்டும்.

11. பணம் சம்பதித்துதான், வீடு கட்டித்தான், கார் வாங்கித்தான் என்று குழந்தை பிறப்பை தள்ளிப்போடாதீர்கள்.

12. இளவயதில் திருமணம் முடிப்பதால் எந்த பிரச்சனை இருந்தாலும் எந்த சிகிச்சை செய்வதற்கும் நமக்கு காலமும், வயதும், உடலில் பலமும் இருக்கும். அதுவே 30 வயதிற்கு மேல் பல வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.

13. 30 வயதை தாண்டியவர்கள் ஒபிசிடி, சுகர், பி.பி,கொலஸ்ட்ரால் என்று ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளவும்.

14. சாப்பாட்டு முறை வேறு மாறி விட்டது, ஜங்க் ஃபுட் அதிகம், நேரம் விட்டு சாப்பாடு, ஒழுங்கான தூக்கமின்மை போன்றவற்றை தவிர்க்கவும்.

15. ஆண்களில் விந்தணு குறைபாடு மற்றும் ஆண்மை குறைவு (ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். ) போன்றவை குழந்தைப்பேறின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் பிரச்சினையாகும். இதை தக்க மருத்துவரிடம் ஆலோசித்து சரிசெய்துகொள்ளவும்.

16. சர்க்கரை நோய்க்கும் குழந்தைப் பேறு இல்லாமைக்கும் தொடர்பு உள்ளது. உயிரணு மற்றும் கருமுட்டை உற்பத்தியில் சமச்சீரற்ற தன்மையை சர்க்கரை நோய் உருவாக்குகிறது. ஆனால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு குழந்தையின்மைக்கான சிகிச்சையைப் பெற முடியும். அதற்கான நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

17. அதிக அளவில் செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், டிவி பார்ப்பவர்கள் கதிர் வீச்சு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்கள் மனதளவிலும் பாதிப்படைகின்றனர். இதனாலும், குழந்தை பிறப்பு தடைப்படுகிறது என்ற தகவல் அறிவியல் ரீதியில் சொல்லப்படுகிறது.

18. ஓராண்டு வரை முயற்சி செய்துவிட்டு பிறகு மகப்பேறு மருத்துவரை அணுகி கருக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்று மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்க்கவும்.

19. தொடர்ந்து வரும் ஜுரம், அதிக வெய்யிலில் அலைவது இவை விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி இவற்றை பாதிக்கும். ஏனென்றால் அதிக உஷ்ணம் ஆணுறுப்பை பாதிக்கும். உடல் உஷ்ணத்தை விட, விரைகளின் உஷ்ணம் சாதாரணமாக 2 டிகிரி குறைந்தே இருக்கும்.

19. உடல் பருமனை குறைப்பது.

20. சுற்றுப்புற சூழ்நிலையின் மாசு நச்சுப்பொருட்கள் தாக்குதலை தடுத்தல்.

21. எக்ஸ்ரே ஸ்கேன் போன் Radiation சிகிச்சைகளை தவிர்த்தல்.

22. சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளுதல்

23. தினமும் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

24. உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமு ம் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

25. தொடர்ச்சியாக நைட் ஷிப்ட் வேலை செய்து வந்த பெண்களில் 29 சதவீதத்தினர் வரை கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

26. வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளான பாலாடை கட்டி, முட்டை, பால், கெட்டி தயிர், தானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

27. ஜிங்க் உணவுகளான கடல் சிப்பிகள், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள், இஞ்சி, கோதுமை, இறைச்சி, டார்க் சாக்லேட், தர்பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவது, ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கும்.

28. செலினியம்(Selenium) நிறைந்துள்ள உணவுகளான மட்டி (Shellfish), ஈரல், மீன், சூரியகாந்தி விதைகள், நண்டுகள், இறால்கள், கடல் நண்டுகள், அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் விந்தணு குறைபாட்டைத் தடுக்கும்.

29. அடிக்கடி சுயஇன்பம் மற்றும் உடலுறவு மேற்கொள்ளுதலை தவிர்க்கவும்.

கருவுருதலில் என்னதான் நடக்கிறது?

மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும். உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். இது ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!

ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது.

ஆண்களுக்கான காரணங்கள் :

ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். மேலும் கீழகண்டவற்றில் ஆண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

மன அழுத்தம்
உடல் பருமன்
அளவுக்கு அதிகமாக குடிப்பது
நீரிழிவு
இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது
உடலை பராமரிக்க ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது
அதிகமாக வண்டி ஓட்டுவது
புகைப்பிடிப்பது
ஜங்க் உணவுகளை சாப்பிடுவது
போதிய தூக்கம் இல்லாதது
இறுக்கமாக உள்ளாடை அணிவது
மொபைலை பாக்கெட்டில் வைப்பது
நோய்த்தொற்றுகள் இருப்பது
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வது
பரிசோதனைகள் :

ஆணின் விந்தணு பரிசோதனை அவசியம். இந்த சோதனையில் விந்தணு கொள்ளளவு, எண்ணிக்கை, நகரும் தன்மை, Morphology போன்றவை கணிக்கப்படும்.

விந்து அணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, விந்து அணுக்களின் இயக்கத் தாமதம் என இரண்டுக்குமே, உணவில் முளைகட்டிய பயறு வகைகளும், லவங்கப்பட்டை, சாதிக்காய், போன்ற நறுமணப் பொருட்களும் நிறைய சேர்க்க வேண்டும். தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரப்பருப்பு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினைகளைக் குறைக்கக் கண்டிப்பாக உதவும்.போகம் விளைவிக்கும் கீரைகள் எனச் சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றைக் கண்டிப்பாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவுக்கு விந்து அணுக்களை அதிகரிப்பதிலும் இதன் இயக்கத்தைக் கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கின்றன இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்.பூனைக்காலி விதை, ஓரிதழ்தாமரை, நிலப்பனைக் கிழங்கு, முதலான பல சித்த மருத்துவ மூலிகைகள் பயனளிப்பதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்தியுள்ளது. நெருஞ்சில் முள் விந்தணுக்களின் உற்பத்தி நடைபெறும் செர்டோலி செல்கள் சிதைவைக்கூடச் சரிசெய்வது தெரியவந்துள்ளது.

பெண்களுக்கான காரணங்கள் :

பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.

பரிசோதனைகள் :

Ovulation சமயத்தில் தான் முட்டை உற்பத்தியாக கருத்தரிக்க ஏதுவாகும். Ovalution period தொடங்கி விட்டதா என்று அறிய பெண்ணின் உடல் உஷ்ணத்தை Thermometer ஆல் தெரிந்து கொண்டால் போதும். சாதாரண சூட்டிலிருந்து 0.9 டிகிரி தி (0.5டிகிரிc) அதிகம் தெரிந்தால் Ovulation தொடங்கிவிட்டது. என அறியலாம். இதை விட வேறு பல புதிய சாதனங்களும், சோதனைகளும் (Ultra Sonography or ovulation predicter kits) வந்து விட்டன. ரத்தத்தில் உள்ள Progesterone ம், உமிழ்நீரும் சோதிக்கப்படும். குழந்தையின்மைக்காக ஒரு மருத்துவரை ஆலோசிப்பதற்கு முன்பாக நீங்களே சரி செய்து கொள்ள வேண்டியவை.

உணவு:

நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்வது அவசியம். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டாலே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.

உடல் எடை :

உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்கள் எடை அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது சரியான எடையிலிருந்தாலே இயல்பாக கருத்தரிக்க முடியும்.

உடற்பயிற்சி :

முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம்.

புகைப்பழக்கம்:

புகை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் புகை இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும். ஆண்களில் விந்தணு தரத்தை புகை குறைத்திடும்.

குடிப்பழக்கம்:

போதைப் பொருட்களின் உபயோகம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் வெகுவாக பாதிக்கும். குடி/போதை பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.

பிற மருந்துகள்:

ஆண்களில் பிற மருந்தகளின் உபயோகமும் வெகுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும். அல்சர் (வயிற்றுப் புண்) உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிக்கான பிற மருந்துகளின் உபயோகமும் தவிர்க்கப்பட வேண்டும்.

உறவு:

கருவுற வாய்ப்புள்ள காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை உறவு கொண்டால் போதாது குறைந்தது 3 முறையாவது உறவு வைத்துக் கொள்வது அவசியம்.

கருவுறும் காலம் :

மிருகங்களுக்கு இயல்பாகவே எப்பொழுது கருவுற வாய்ப்புள்ளதோ அப்பொழுதே உறவு கொள்ள விருப்பம் ஏற்படுகின்றது. மாதவிடாய் போன்ற இரத்தம் போக்கும் ஏற்படுகின்றது. ஆனால், மனிதர்களில் அவ்வாறு அல்ல. எல்லா நாட்களிலும் உறவு கொண்டு முட்டை வெடிக்கும் சமயத்தில் உறவு கொள்ளாது போனால் வீணாகப் போய் விடும். எனவே, முட்டை வெடித்து சிதறும் சமயம் (இரு மாதவிடாய்களுக்கும் சுமாரான நடுப்பகுதி) உறவு கொள்வது அவசியம்.

உறவு முறை:

எவ்வாறு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறை ஆண் மேல் புறமும் பெண் கீழ்ப்புறமும் இருந்தவாறு உறவு கொள்வதேயாகும். உறவு முடிந்ததும் உடன் எழுந்து விடக்கூடாது. குறைந்தது 5 நிமிடம் பெண்கள் படுத்திருக்க வேண்டும்.

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது (what is the right days for intercourse)?

உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலேஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும்,இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.

எனக்கு முட்டை வெளிப்படும் (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது (how to find the ovulation periods)?

உங்களுக்கு இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு சுண்டி இழுப்பது போல இருக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting),உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும். உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்.

முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு,இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். உடல் வெப்பத்தை சாதாரனமாகவே நீங்கள் உணர முடியும். அக்குள் மற்றும் மார்பின் கீழ்பகுதி தொடைகளில் சூடாக உணர்வீர்கள்.

உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளிப்படும் (Ovulation) நாள் சரியாக 14ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளிப்படும் நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளிப்படும் நாள்

பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’ பாதிப்பு பெண்களிடம் தற்போது பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால் பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சினைகளும் பெருகி வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். தாய்மையடைய முடியாமல் தவிக்கும் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி. ஓ.எஸ்` பாதிப்பிற்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.யு.ஐ. (IUI) / ஐ.வி.எப். (IVF) முறைகள்:

மருத்துவத்துறையின் அளப்பரிய முன்னேற்றம் காரணமாக டெஸ்ட் ரியூப்பில் குழந்தையை உருவாக்கக் கூடிய முறை அறிமுகமானதால் குழந்தை இல்லாதவர்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

Intrauterine insemination (IUI):

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் சில மருந்துகளை கொடுத்து, பிறகு ovulation ஐ தூண்டி, பிறது ஒரு குறிப்பிட்ட நாளில் கணவனின் விந்தை எடுத்து மனைவிக்கு செலுத்தி விடுவார்கள். இது ஒருவகையில் இயற்கை முறையிலேயே செய்வதால் மிக சுலபமானதாக கருதப்படுகிறது. இதில் முட்டையை வெளியில் எடுக்காததால் ஒருவகையில் கரு பெண்களின் உடலிலேயே வளர்கிறது. IVF போன்று வெளியில் எடுத்து பின்பு உள்ளே விடுவதில்லை. ஆனால் இது முதல் முயற்சியில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மேலும் மறுந்து சாப்பிடும் அனைத்து முறைகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

In vitro fertilization (IVF):

டெஸ்ட் ரியூப் குழந்தை என்பது உண்மையில் ஒரு வகை செயற்கைச் சினையூட்டல் முறையாகும். அதாவது உடலுக்கு வெளியே ஆய்வு கூடத்தில் பெண்ணின் முட்டையானது சினையூட்டப்படும். அதனால் உண்டாகும் கருவை பின் கருப்பையில் பதித்து, இயற்கையாக வளரச் செய்வர். செயற்கை என்பது முகமறியா வேறொருவரின் விந்தைக் கொண்டு சினையூட்டல் எனப் பொருள்படாது. கணவனின் விந்தைக் கொண்டே பெரும்பாலும் சினைப்படுத்தப்படுகிறது. கணவரின் விந்தணுக்கள் இல்லாவிட்டாலும் கூட அவரின் விதையிலிருந்தே விந்தணுக்களை வெளியே பிரித்து எடுத்து சினையூட்டப்படும் வைத்திய வசதி இப்பொழுது உண்டு. அதுவும் முடியாத கட்டத்தில் மட்டுமே வேறு ஒருவரின் விந்தைத் தானமாகப் பெறவேண்டிய தேவை ஏற்படலாம்.

இருந்தபோதும் In Vitro Fertilisation- IVF எனப்படும் டெஸ்ட் ரியூப் குழந்தையானது வேண்டுவோர் எல்லோருக்கும் சுலபமாகக் கிட்டிவிடுவதில்லை. இதற்கும் காரணங்கள் பல.
இச்சிகிச்சை முறையின் போது மருந்து கொடுத்த பின் உற்பத்தியாகும் முட்டைகளை அல்ரா சவுண்ட் துணையுடன் வெளியே எடுத்து கணவரின் அல்லது கொடையாளியின் விந்துவவைக் கொண்டு கருவூட்டுவர்.

கட்டாயம் அனைவருக்கும் பகிருங்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும் தக்காளியின் பயன்கள் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
Next article40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள் எவை தெரியுமா!