குரு பெயர்ச்சி பலன் கடகம் 2020 – 2021 guru peyarchi palangal kadagam rasi 2021

0

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான ஆண்டு கோளான குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். குரு தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 11- ஆம் வீடுகளை பார்ப்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் சிறப்பாக கைகூடும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் கிடைக்கும். விரோதம் பாராட்டிய உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும்.

ராகு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்களும் லாபங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனைப் பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் மேலும் மேன்மைகளை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைகளுக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டால் சாதகமான பலனை அடைய முடியும். சனி பகவான் 7-ல் சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறுசிறு இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது எந்த செயல் செய்வது என்றாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிம்மதியை உண்டாகும். தொலை தூரப்பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் இருந்தாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடந்த கால வீண் செலவுகள் படிப்படியாகக் குறையும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபசெய்திகள் கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களைச் சிறப்பாக செய்து முடித்து லாபங்களை அடைவீர்கள்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாடு மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளுக்கான பாராட்டுதல்களும் கிட்டும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். சிலருக்கு வேண்டிய இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். கடந்த கால அலைச்சல், டென்ஷன்கள் குறைந்து பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சக ஊழியர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது.

பெண்கள்

உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பதும், நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நல்ல நட்புகள் மூலம் சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடைவீர்கள்.

விவசாயிகள்

எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. கடன்கள் குறையும்.

கலைஞர்கள்

உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்த கால மந்த நிலை விலகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பெற்றோரிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021

குருபகவான் உங்கள் ராசியதிபதிக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்வதாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும் என்றாலும் 5-ல் கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் கொடுத்த நேரத்தில் காப்பாற்ற முடியும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெற்று மன மகிழச்சி ஏற்படும். எதிர்பாராத இனிய செய்திகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை நிலவும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் யாவும் சிறப்பாக அமையும். தொழில், வியாபார ரீதியாக கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகி நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் எதிர்பார்க்கலாம். வேலையாட்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் குறையும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரக்கூடிய காலம் என்பதால் அதை சிறப்புடன் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021

குருபகவான் உங்கள் ராசியாதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடைவீர்கள். தேவையற்ற செலவுகள் குறையும். ராகு 11-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி அளிக்கும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். நவீன பொருட் சேர்க்கைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தினை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து நிம்மதி ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். போட்டி, பொறாமைகள் குறையும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. இருக்கும் இடத்தில் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கடன்கள் குறையும்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021

குருபகவான் ஜென்ம ராசிக்கு 7-ல் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். உங்களுக்கிருந்து வந்த கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக வயிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனை அடைவீர்கள். ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களின் ஆதரவும், உதவியும் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை கவனமாக கையாண்டால் தொழிலில் லாபங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக பேசினால் எதையும் சமாளிக்க முடியும்.

குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021

குருபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் 7-ல் சனி சஞ்சரிப்பதாலும் தேவையற்ற நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புக்களால் மன நிம்மதி குறையும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்சினைகளை உண்டாக்கும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பணவரவில் நெருக்கடிகள் இருந்தாலும் ராகு 11-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் பிறர் செய்ய வேண்டிய பணிகளையும் நீங்களே செய்து முடிக்க வேண்டி இருக்கும். தொழில் ரீதியாக சிறிது நெருக்கடிகள் இருக்கும் என்பதால் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே மேன்மையை அடைய முடியும். தற்போது கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் காப்பாற்றிக் கொள்வது மிகவும் நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வழியில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் நற்பெயர் அடைய முடியும்.

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு 11–ல் சஞ்சரிப்பதால் எதிலும் ஓரளவுக்கு நற்பலன்களை அடைவீர்கள். பண விஷயத்தில் மட்டும் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு முன்னேற்றமாக இருக்கும். எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சனி 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைப் பெற முடியும் என்றாலும் சுப காரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெற முடியும். எதிலும் நீங்கள் சற்று முனைப்புடன் செயல்பட்டால் பொருட் தேக்கங்கள் ஏற்படாமல் வளர்ச்சி அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளித்து நற்பெயர் எடுக்க முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021

குருபகவான் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நல்லது நடக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகளும் பல்வேறு தொடர்புகளும் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று அனுசரித்து செயல்படுவது நல்லது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். உடல்நிலையில் சற்று சோர்வு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 5-ல் கேது சஞ்சரிப்பால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 7-ல் சஞ்சரித்து கண்டச்சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு மலர்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது, முடிந்தால் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்லது. கேது 5-ல் சஞ்சரிப்பதால் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9 நிறம் – வெள்ளை, சிவப்பு கிழமை – திங்கள், வியாழன்

கல் – முத்து திசை – வடகிழக்கு தெய்வம் – வெங்கடாசலபதி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன் மிதுனம் 2020 – 2021 guru peyarchi palangal mithunam rasi 2021
Next articleஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்!