டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட 81 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திங்கள் அன்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணம் மேற்கொள்ள 81 வயது முதியவர் ஒருவர் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வரப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் சட்ட திட்டங்களின் படி அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
சோதனையின் ஒருபகுதியாக அவரை நாற்காலியில் இருந்து எழுந்து நிற்க கோரிய அதிகாரிகளிடம் அவர் வயது மூப்பை காரணம் காட்டி மறுத்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் அவரிடம் இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்த நிலையில், அவர் கண்கள் பார்த்து பேச மறுப்பது அதிகாரிகள் பார்வையில் பட்டுள்ளது.
இதனையடுத்து அதிகாரி ஒருவர் அவரது கடவுச்சீட்டை பரிசோதித்துள்ளார். அதில் அவர் பெயர் அம்ரிக் சிங் எனவும் 81 வயது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அம்ரிக்கின் முகத்தில் 81 வயது முதியவருக்கான தோற்றம் இல்லை என்பது மட்டுமல்ல, அவரது தாடியும் தலைமுடியும் மட்டுமே நரை பாதித்திருந்துள்ளது.
இது அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
அம்ரிக் தமது தாடி மற்றும் தலைமுடிக்கு வண்ணம் பூசியுள்ளதும், கண்களுக்கு முதியவர்கள் அணிந்துகொள்வது போன்று போலி கண்ணாடி அணிந்துள்ளதும் அம்பலமானது.
மட்டுமின்றி, அம்ரிக்கின் உண்மையான பெயர் ஜயேஷ் பட்டேல் எனவும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 31 வயதான இவர் போலியான கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பட்டேல், உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.