மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

பொதுப்பலன்கள் : ராசிக்கு – 2 ல் அதாவது தன ஸ்தானத்தில் புத்தாண்டு பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். அரைகுறையான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். அதே நேரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதும் நல்லது. தேவையில்லாதவற்றுக்காகச் சண்டை போடாதீர்கள். வாழ்க்கைத் துணையின் உடன் பிறப்புகளால் செலவுகள் கூடினாலும், நிம்மதி பெருகும். வைகாசி மாதத்தில் இருந்து அநாவசியச் செலவுகளைக் குறைப்பீர்கள். வெளியூர்ப் பயணங்கள் மன நிறைவு தரும்.

பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் பையனுக்கு, நல்ல பெண் அமைந்து, ஆனி -ஆவணி மாதங்களில் கல்யாணம் முடியும். பழைய சொத்தை விற்று விட்டுப் புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதர -சகோதரிகளால் நன்மையும் நிம்மதியும் உண்டாகும். அவர்களது தேவைக்கு உதவுவீர்கள். புதிய ஆடை- ஆபரணங்கள் சேரும்.

வருடத்தின் மத்தியப் பகுதியில் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர் – நண்பர்களுக்கு மத்தியில் மதிப்பு – மரியாதை கூடும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு, விரும்பியப்படி சென்று வருவீர்கள். கோயிலைப் புதுப்பிக்க முயல்வீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும்.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் உதவி கிடைக்கும். ஐப்பசி, பங்குனி மாதங்களில் வீடு-மனை வாங்குவீர்கள். குடும்ப வருமானம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்தவர்கள், பக்க பலமாக இருப்பர். முன்கோபத்தைக் குறையுங்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. யாருக்காவும் ஜாமீன் கையெழுத்து இட வேண்டாம். கனவுத் தொல்லை, தூக்கம் இன்மை வந்து போகும். அக்கம் பக்கத்தாரின் அன்புத் தொல்லைகள் விலகும். பழைய வாகனத்துக்கு பதில் நவீன ரக வாகனத்தில் உலா வருவீர்கள்.

ராகு-கேது சஞ்சாரம் எப்படி இருக்கும் : ஆண்டுத் தொடக்கம் முதல் 20.3.2022 வரை ராகு 3-ல் நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தையாருக்கு மருத்துச் செலவுகள் வந்த வண்ணம் இருக்கும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராகு 2-ல் நுழைவதால் வீண் டென்ஷன், பேச்சில் கடுகடுப்பு, பதற்றம் அதிகரிக்கும். கேது 8 – ல் நுழைவதால் விபத்து, திடீர் பயணங்கள் வரக்கூடும். ஆவணி மாதத்தில் கல்யாணம், சீமந்தம், புது மனை புகுவிழா, காதணி விழா என வீட்டில் விஷேசங்கள் நடக்கும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள்.

11 லும் 12 லும் அமர்ந்து குருபகவான் தரும் பலன்கள் என்ன : 14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது. தந்தையாருக்கு நெஞ்சு வலி, அசதி, சோர்வு வந்து போகும். அவருடன் அவ்வப்போது மனத்தாங்கல் வரும்.

ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோயில் கும்பாபிஷேகத்திற்குத் தலைமை தாங்குவீர்கள்-. செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள்.

சனி பகவான் அருளும் பலன்கள் எவை : உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சனியும் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களைத் தலைநிமிர வைக்கும். செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்துப் புது வீட்டில் குடிப்புகுவீர்கள். அனுபவப்பூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கடன் பிரச்சனைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

வியாபாரம் எப்படி இருக்கும் : கணிசமாக லாபம் உயரும். மறைமுகப் போட்டிகளில் எதிரிகளை வெல்வீர்கள். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். வேலையாட்களது பிரச்னைகள் சுமுகமாக முடியும். உணவு, மருந்து, புரோகரேஜ் வகைகளில் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளிநாட்டுத் தொடர்புடன் அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். அரசு கெடுபிடி தளரும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும்.

உத்தியோகம் எப்படி இருக்கும் : உங்களை வீழ்த்த முயன்ற பலரும் விரக்தி அடைவர். உங்களது உழைப்பை மேலதிகாரி புரிந்து கொள்வார். இனி, கூடுதல் நேரம் வேலை பார்க்கும் தொல்லை இருக்காது. சக ஊழயர்களிடையே உங்களைப் பற்றி நிலவி வந்த அதிருப்தி நீங்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களது படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவியும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.

இந்தப் புத்தாண்டு உங்களது திறமைகளை அதிகப்படுத்துவதுடன், சகிப்புத் தன்மையையும் பணவரவையும் தரும்.

பரிகாரம் என்ன : திருச்செந்தூர் முருகப் பெருமானை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள். அல்லது கார்த்திகை நட்சத்திர நாளில் முருகன் கோயிலுக்குச் சென்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். செல்வம் சேரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next articleஇன்றைய ராசி பலன் 16.04.2021 Today Rasi Palan 16-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!