மஹா குருப்பெயர்ச்சி – கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்?

0

மனித வாழ்க்கையின் ஏற்றம் – இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்.

தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார். இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 04.10.2018 மற்றும் 11.10.2018 ஆகிய இரு நாட்கள் குருப் பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.

சரி வாருங்கள்…இந்த மஹா குருப்பெயர்ச்சியால் எந்த எந்த ராசிகளுக்கு என்ன என்ன பலன் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

துலாம் முதல் மீன‌ம் வரையிலான ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

எதையும் துணிவோடு எதிர்த்து நிற்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு 11-10-2018 முதல் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகயிருப்பதால் உங்களின் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகளை சந்திக்க கூடிய சூழல் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் நீண்ட தடை தாமதத்திற்கு பின்பே உங்களுக்கு கிடைக்கும்.

வயிறு சம்பந்தமான நோய்கள், அஜீரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணைக்கும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சனிபகவான் 9 ஆம் வீட்டில் இருப்பதால் வெளியூர் பயணங்களில் உங்களுக்கு ஆதாயம் ஏற்படும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும் நிலை உருவாகக்கூடும்.

13-2-2019 அன்று ஏற்படவிருக்கும் ராகு மாற்று கேது பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமான நிலைமை உண்டாகும். ஈடுபடும் எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றிபெறுவீர்கள். பரிச்சயமில்லாதவர்களிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் மிக பெரிய தொகையை ஈடுபடுத்தக்கூடாது. அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறமுடியாவிட்டாலும் பதவி உயர்வுகளை பெரும் யோகம் உண்டு.

கோவில் சம்பந்தமான புனித காரியங்களில் ஈடுபட்டு கௌரவத்தையும் ஆண்டவனின் அருளையும் பெறுவீர்கள். குருபகவான் 8 ஆம் இடத்தில் இருந்தாலும் உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் பகவானுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

உங்கள் உடலை ஓய்வின்றி தொடர்ந்து வருத்திக்கொள்வதாலும், அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் அசதி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டு மீள்வார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படலாம். உறவினர்களளோடு அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டில் திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பல தாமதங்களுக்கு பிறகு வெற்றியடையும்.

உங்களுக்கு மறைமுக எதிரிகள் அதிகமாவார்கள். நீங்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பதில் பிரச்சனைகள் உருவாகலாம். புதிதாக தொடங்கப்படும் தொழில் வியாபார முயற்சிகளில் சிறிது கடிமான காலகட்டங்களை கடந்த பிறகே சிறந்த பலன்களை பெற முடியும். தொழில் வியாபாரங்களில் சக வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் மறைமுக எதிர்ப்புகள் போட்டி பொறாமைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலார்கள், வேலையாட்கள் மூலமும் உங்களுக்கு சில பிரச்சனைகள் உருவாகக்கூடும்.

பணியிலிருப்பவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிதாக வேலை தேடும் நபர்களுக்கும் பல விதமான அலைச்சல்கள் மற்றும் சங்கடங்களை சந்தித்த பிறகே நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளின் பணிகளுக்கான முயற்சிகள் வெற்றியடையும். அரசியில் மற்றும் பொது வாழ்வில் இருபவர்களுக்கு வீண் வதந்திகள் மற்றும் கட்சியினரின் செயல்பாடுகளால் தர்ம சங்கடமான நிலை ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

அரசாங்கம் வழங்கும் பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும், கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பெற்ற பிள்ளைகள் வழியில் சற்று மன சங்கடங்கள் ஏற்படும். மாணவ -மாணவியர் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். தவறான நட்புகளால் அவப்பெயரை சம்பாதிக்கும் நிலையுண்டாகும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

உங்கள் ராசியாதிபதியாகிய செவ்வாய்க்கு குரு பகவான் நட்பு கிரகம் ஆவார். இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பண விடயங்களில் நெருக்கடிகள் இருந்தாலும், திடீர் பொருள் வரவுகளும் இருக்கும். தம்பதிகளிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். அசையும் சொத்து, அசைய சொத்துகள் விற்பனையில் சிறிது தடங்கல் ஏற்பட்டது நீங்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

சனி பகவான் 9 ல் சஞ்சாரம் செய்வதால் மிகப்பெரும் அளவில் பணத்தை ஈடுபடுத்தி செய்யும் தொழில்கள் இன்ன பிற விடயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாறுதல்களால் அலைச்சல் அதிகரிக்கும்.திருமண முயற்சிகளில் இருப்பவர்கள் அந்த முயற்சியை சற்று தள்ளி வைப்பது நல்லது. இக்காலத்தில் உங்கள் தொழில்,வியாபாரங்களில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

எல்லாவித எதிர்ப்புகளையும், போட்டிகளையும் எதிர்த்து சமாளித்து வெற்றி பெறக்கூடிய சக்தி உண்டாகும். அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். ஊழியர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் படித்தால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

இக்காலத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் மீண்டும் கட்டிவிடும் சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று தொய்வு ஏற்படும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை – அதற்கான பலன்

குரு வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலத்தில் உடல் ஆரோக்கியம் சற்று பாதிப்படையும். பிறருடனான பேச்சுவார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. எதிரிகளும் இக்காலத்தில் நண்பர்களாக மாறுவார்கள். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

சிறு சிறு மருத்துவச்செலவுகள் ஏற்படும். தம்பதிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டாலே வீண் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க முடியும். உற்றார் உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்

வியாழக்கிழமை தோரும் குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பரிகாரம் ஆகும். சனி பகவானுக்கும் சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. தினந்தோறும் விநாயக பெருமானை வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 11-10-2018 அன்று ரிஷப ராசிக்கு 7 ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சியாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும்.

முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். 13-2-2019 அன்று ஏற்பட இருக்கும் ராகு-கேது பெயர்ச்சிகளுக்கு பின்பு எல்லா வகையிலும் நன்மையான பலன்களை அதிகம் பெற முடியும். உறவினர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகளும் ஒற்றுமை குறைவுகளும் ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

பெரும்பாலான காலம் உடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறிது நோய்வாய்ப்பட்டு மீண்டும் குணமாகும் நிலையிருக்கும். சொந்தக்காரர்கள் எவருக்கேனும் மருத்துவ உதவிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வீடு மற்றும் புதிய வாகனங்களை வாங்கும் யோகம் நிறைவேறும். கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை அடைத்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் கொடுத்த தொகையை வட்டியுடன் திரும்ப பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.

தொழில், வியாபாரங்களில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும்.

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். பொது மக்களின் ஆதரவை அவ்வளவு சுலபத்தில் பெற முடியாது. கட்சியில் உடன் இருப்பவர்களின் சதிகளுக்கு ஆளாக கூடும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். புதிய பூமிகளை வாங்கி, புதிய பயிர்களை நட்டு வளர்த்து அதன் மூலமும் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் குடும்ப விவகாரங்கள் குறித்து பிறருடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். விரும்பிய மேற்படிப்புகளை படிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளையும் லாபங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருளாதார பலம் இருக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் போது பலமுறை சிந்தித்து, தகுந்த ஆவணங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது. எதிலும் சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தாராளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் மூலம் நற்பலன்களையும் லாபங்களையும் பெற முடியும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைத்து விடும் யோகம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உடலில் கை, கால்களில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பண விவகாரங்களில் முன்னெச்சரிக்கை அவசியம்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உடல் உஷ்ணம் சம்பந்தமான நோய்களால் அவதியுறுவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. உங்களுடன் பணிபுரிபவர்கள், தொழில் – வியாபாரகூட்டாளிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்கு கடன் தருவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

தேவையற்ற பயணங்களால் உடல் மற்றும் மனம் களைப்படையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் சற்று அனுசரித்து செல்ல வேண்டும். தொழில் வியாபாரங்களில் சராசரியான லாபமே ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதத்திற்கு பின்பே கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

எதிர்பாராத தன வரவுகள் இருக்கும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிப்படையும். எல்லாவற்றிலும் சுறுசுறுப்பாக செயலாற்ற முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வெளிநாடுகளுக்கு பணி புரிய செல்ல விரும்புபவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமை அன்று திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது சனி பகவானின் கெடு பலன்களை குறைக்கும். ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பலம் தீபம் ஏற்றுவது சிறந்த பரிகாரமாகும்.

மிதுனம்

சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு 11-10-2018 அன்று குருபகவான் மிதுன ராசிக்கு 6 ஆம் இடத்தில் பெயர்ச்சியாக இருப்பதால் மறைமுக எதிரிகள் உண்டாவார்கள். அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்கக்கூடிய நிலை ஏற்படும். பெரும் தொகையை கடனாக கொடுத்தவர்கள் அதை சுலபத்தில் வசூல் செய்ய முடியாமல் தவிப்பார்கள்.

பண விவகாரங்களில், நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

வயிறு கோளாறுகள் சம்பந்தமான பிரச்னைக்களால் அடிக்கடி அவதியுறுவீர்கள். உடல் உஷ்ணம் சம்பந்தமான வியாதிகளால் பாதிப்படையும். மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். அதிக பயணங்கள் செய்வதாலும் உடல் நலம் பாதிக்கும். உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்குமிடையே பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் பிறருக்கு நல்லது செய்ய முயற்சித்தாலும் அது உங்களுக்கே அவப்பெயரை சம்பாதித்து தரக்கூடிய நிலை உண்டாகும். பிறருக்கு முன்ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள்.

பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக சதிகளை செய்வார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்ல கூடிய நிலை ஏற்படும். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபமில்லையென்றாலும் முதலீடுகளை திரும்ப பெறும் அளவிற்கு வருவாய் இருக்கும்.

விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் இருக்கின்ற வாய்ப்புகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படும். திருமண வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். பெரிய அளவு தொகைகளை பிறருக்கு கடனாக தருவதை தவிர்க்கவும்.பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தம்பதிகளிடையே அன்னோன்யம் கூடும். வியாபாரங்களில் போட்டி கடுமையாவதால் சற்று கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

வாகனங்களில் பயணிக்கும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் ஆகும். அலைச்சல்கள், மன அழுத்தம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். சிலர் தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு ஆறுதலை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை பெறுவார்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியமாகும். பிறரின் விவகாரங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

தம்பதிகளுக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் மறையும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகளை பெறலாம். உறவினர்களால் மகிழ்ச்சியும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களால் நல்ல லாபங்களை பெருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

குடும்பத்தில் அவ்வப்போது சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும், ஒற்றுமை குறையாது. எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரங்களில் லாபம் பெருகும். தீர்த்த யாத்திரைகளை சிலர் மேற்கொள்வார்கள். எதிர்பாராத பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாறுதல்கள் கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய நிலை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும். மனம் சற்று குழப்ப நிலையிலேயே இருக்கும். பிறருடன் பேசும் போது வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும்.

பரிகாரம்

குரு பகவான் பாதகமான பலன்களை தரும் நிலையில் இருப்பதால் வியாழக்கிழமைகள் தோறும். குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலையை சாற்றி, மஞ்சள் நிற பூக்களை வைத்து நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிவதால் குரு பகவானின் ஆசிகள் கிட்டும். தினமும் விநாயகரை வழிபட்டு வருவது நல்லது.

கடகம்:

பிறரை சரியாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு அதிபதியாகிய சந்திரனுக்கு நட்பு கிரகமாகிய குரு பகவான் 11-10-2018 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு 5 ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். குரு பகவான் ஜாதகத்தில் எந்த ஒரு ராசிக்கும் ஐந்தாம் இடத்தில் வருவது மிக சிறப்பான ஒரு அம்சமாகும்.

இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பணம் அதிகளவில் வந்து சேரும். உங்கள் தாத்தா பாட்டிகளின் பரம்பரை சொத்துக்கள் உங்களை வந்தடையும். திருமணம் நடக்காமல் ஏங்கியவர்களுக்கு அவர்களின் மனம் மற்றும் குணநலத்திற்கு ஏற்ற வாறு வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பெருகும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனங்களை வாங்குவீர்கள். அரசு டெண்டர், கான்ட்ராக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபம் கிட்டும். நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.

தொழில், வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் அழிவதால், உங்களுக்கு இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். அதிகளவு வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைத்து அதன் மூலம் எக்கச்சக்க லாபத்தை அடைவீர்கள். பணியிடங்களில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும், விசுவாசமும் கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக செயலாற்றி மக்களின் நன்மதிப்பை பெரும் சூழல் உண்டாகும்.

சிலருக்கு கவுரவ பதவிகளும் கிடைக்கும். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு அவர்களின் நிலத்தில் பயிர்வகைகள் நல்ல விளைச்சலை கொடுக்கும். நீங்கள் கேட்ட விலைக்கு உங்களின் விளைபொருட்கள் வியாபாரிகளாலும், பொதுமக்களாலும் வாங்கப்படும். உங்களின் விவசாயக்கடன், மற்றும் பயிர்க்கடன் போன்றவற்றை திரும்ப அடைத்து விடக்கூடிய பொருளாதார பலத்தை பெறுவீர்கள். பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைபேறில்லாமல் தவித்த பெண்களுக்கு புத்திர பாக்கியங்கள் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 இருப்பதால் ஏற்படும் பலன்கள்

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிகளவு தனவரவுகள் இருக்கும். வீட்டில் சுபிட்சம் பொங்கும். பிரிந்து போன உறவுகளும் நண்பர்களும் உங்களை தேடி வந்து சொந்தம் பாராட்டுவார்கள். குழந்தைகள் வழியில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைவீர்கள். மாணவர்கள் தங்களின் கடின முயற்சி காரணமாக சிறந்த வெற்றிகளை பெறுவீர்கள். உங்கள் சம்பாத்தியத்தில் ஒரு தொகையை ஆன்மீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-10-2018 வரை இருப்பதால் ஏற்படும் பலன்கள்

இக்காலகட்டத்தில் பணவரவு பெரிய அளவில் லாபமும் நஷ்டமுமில்லாமல் சராசரியான அளவில் இருக்கும். சிலநேரம் எதிர்பாராத திடீர் தனவராவுக்கும் வாய்ப்புண்டு. திருமணமான தம்பதிகளிடையே சிறிய கருத்துவேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியம் சற்றே பாதிக்கப்படும். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெளிநாடுகள் செல்ல முயல்பவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் பலன்கள்

பணம் பல வழிகளிலில் உங்களை வந்தடையும். திருமணம் முயற்சிகளில் சிறந்த பலன் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும். கூட்டாளிகளின் சிறந்த ஒத்துழைப்பால் தொழிலில் சிறந்த லாபம் கிடைக்கும். குடும்பத்தின் அனைத்து தேவைகளும் பூர்த்தியடையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் பலன்கள்

மருத்துவ செலவுகள் அவ்வப்போது ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் பல அலைச்சல்கள், தாமதங்களுக்கு பிறகு வெற்றியுண்டாகும். பணவரவுகள் நன்றாக இருக்கும். கொடுத்த கடன்களை திரும்ப பெற இயலும். வெளிநாட்டு தொடர்புடைய விடயங்களில் நல்ல பலன்கள் கிட்டும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

உங்கள் உடல் மற்றும் மனோபலம் கூடும். எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். அரசாங்க வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். தொலைதூர பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு சிறிது தேடல்களுக்கு பின்பு தகுதியான வேலை கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

எல்லாவகையிலும் முன்னேற்றங்கள் இருக்கும். எண்ணிய எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சுமூகமாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையும், சுபிட்சங்களும் இருக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு 13-2-2019 அன்று ஏற்படும் ராகு-கேது கிரகங்களின் பெயர்ச்சி சிறிது பாதகத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. மந்தாரை மலரை கொண்டு ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். கேது பகவானின் அருள் கிட்ட தினமும் விநாயக பெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 11-10-2018 அன்று அவர்களின் ராசிக்கு 4 ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சியாகவிருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தில் ஒற்றுமை குறைவும், பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் வம்பு சண்டைகள் ஏற்படக்கூடும். சுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

புத்திர வழியில் மனக்கவலைகள் உருவாகும். பிறரின் சொந்த விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணியிடங்களில் தங்களின் பணிகளை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.

சரியான நேரத்திற்கு உண்ண முடியாததால் அல்சர், அஜீரண கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும். குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். உடலில் அசதியும், மனதில் கவலைகளும் அதிகரிக்கும்.

குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். குடும்ப பாரம்பரிய சொத்துகள் சம்மந்தமான விடயங்களில் சற்று அலைச்சல் உண்டாகும். குழந்தைகள் வழியில் பிரச்சனைகள் உண்டாகும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன்களை வசூலிப்பதில் சிலருக்கு சட்ட ரீதியான பிரச்சனைகள் எழும். நீதிமன்றங்கள் செல்லும் நிலையும் சிலருக்கு ஏற்படும்.

புதிய தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கும், அவற்றை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் அரசாங்க அனுமதி கிடைப்பதில் சற்று தாமதங்கள் ஆகும். தொழிலாளர்கள் மற்றும் பணியாட்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளாமலிருப்பதால் உடல் மற்றும் மன சோர்வை தடுக்க முடியும். பணியாளர்கள், ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும்.

எதிர்பாரா பணியிடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று விலகும். எல்லாவற்றிலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனங்கள் சொத்துக்களை வாங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் சிறந்த லாபம் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

தேவையற்ற பயணங்களால் பொருள் மற்றும் நேர விரயங்கள் உண்டாகும். பணியிலிருப்பவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகம் ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் பல முறை நன்கு ஆலோசித்து ஈடுபட வேண்டும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறும். வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுக்க வரவு செலவுகளில் கவனமுடன் இருக்க வேண்டும்.

வெளிநபர்கள் மற்றும் உறவினர்களிடமும் எதிலும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உருவாகக்கூடும். பொருள் வரவிற்கு பஞ்சமிருக்காது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

தொழில், வியாபாரங்களில் இருந்த போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். நல்ல லாபங்களும் கிடைக்க பெறும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சண்டைகள் ஏற்படலாம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். மாணவர்கள் கல்வியில் சாதனைகளை செய்வார்கள். நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகளும், பணியிட மாறுதல்களும் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

புதிய முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் ஏற்படுவதோடு பொருள் விரயங்களையும் ஏற்படுத்தும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். கடன்களை அடைப்பதில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்டாலும் முயற்சி செய்து அடைத்துவிடுவீர்கள். எதிரிபார்த்த ஊதிய உயர்வுகள் சிறிது தாமதத்திற்கு பின்பு கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெற்றுவிடுவீர்கள். பெரிய அளவு முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஒத்திப்போடுவது நல்லது. வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

பரிகாரம்

வியாழக்கிழமைகள் தோறும் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது குரு பகவானின் அருளை பெற்று தரும். ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், ஆடைகள், போன்றவற்றை தானமளிப்பது குரு பகவானின் முழுமையான அருளை பெற்று தரும் சிறந்த பரிகாரமாகும். தினமும் விநாய பெருமானையும் வழிபட்டு வர தடை தாமதங்கள் விலகும்.

கன்னி

அனைவரிடமும் இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசசிகார்களே 11-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதனால் நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தடைகளும் தாமதங்களும் உண்டாக வாய்ப்புள்ளது. எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றிபெறக்கூடிய நிலையிருக்கும். இந்த ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனியும் நடைபெறுவதால், அனைத்திலும் கஷ்டங்கள் இருக்கவே செய்யும். எல்லாவற்றிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்காது. திருமணம், புது வீடு கட்டுதல் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பிறருடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் இழைக்கக்கூடிய நிலை ஏற்படும். பயன்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.

அதீத உடல் சோர்வால் எந்த விதமான பணிகளை செய்வதிலும் கஷ்டம் இருக்கும். உடல் நிலையும் அவ்வப்போது பாதிப்படைந்து பிறகு குணமாகும். மனக்கவலைகளும், மனஅழுத்தங்களும் அதிகரிக்கும் இருக்கும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடன் பிறந்தவர்களால் மனக்கவலைகள் ஏற்படும். உறவினர்களிடையே சுமூக உறவு இருக்காது.

குடும்பத்தேவைகளுக்காக கடன் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் பிரச்சனைகள் எழலாம். தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு வியாபாரிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனையை கேட்பது சிறந்தது. அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

ஊழியர்கள் எதிலும் சற்று பணிந்து போவது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். உங்களுக்கான பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயற்சி செய்வார்கள். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பழியேற்க நேரிடும். அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை காப்பாற்றி கொள்ள படாத பாடு படுவார்கள். சொந்த கட்சியினரே துரோகம் செய்வார்கள். மக்களிடம் அவப்பெயரை பெறக்கூடிய சூழ்நிலையிருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். அவசரப்பட்டு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கலைத்தொழிலில் இருப்பவர்கள் தங்களின் சக தொழிலாளர்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்பட்டும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

இந்த காலகட்டத்தில் சில சமயம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே கடன்கள் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உடல் நல பாதிப்புகளும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

இக்காலத்தில் எதிலும் சற்று ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உடலிலும் மனதளவிலும் மந்த நிலை, உற்சாகமின்மை போன்றவை இருக்கும். எல்லாவற்றிலும் கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விரும்பிய பலன்களை பெற முடியும். வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதாக இருந்தால் பல முறை ஆலோசித்த பின்பு ஈடுபடுவது நல்லது. அவ்வப்போது உங்களுக்கு உடல் நல பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். 13-2-2019 அன்று ஏற்படும் ராகு – கேது கிரக பெயர்ச்சிகளுக்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் ஓரளவு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்தினால் நன்மை பயக்கும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பணியிலிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபார நிமித்தமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள கூடிய நிலை உண்டாகும். புதிய தொழில் கூட்டாளிகளின் சேர்க்கையால் சிலருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

தம்பதிகளிடையே பிரச்சனைகள் எழலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. புது வீடு கட்டுதல் மற்றும் வீடு மனை வாங்கும் திட்டங்களை சற்று தாமதப்படுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். குடும்பத்தார் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் கால பலன்கள்

குடும்பத்தார்களிடம் அடிகடி வாக்குவாதங்கள் ஏற்படும். பிறரின் சொந்த விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. சாப்பிடும் உணவு விடயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். தொழில் வியாபாரங்களில் சற்று மந்த நிலையே இருக்கும். பிறரின் பிரச்சனைகளுக்கு மத்தியஸ்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.

பரிகாரம்

அர்த்தாஷ்டம சனி உங்கள் ராசிக்கு நடைபெறுவதால் தொடர்ந்து சனிக்கிழமைகளில் சனி பகவானுக்குரிய மந்திரங்களை கூறி வழிபட்டு, காகங்களுக்கு உணவு அளித்து வர வேண்டும். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு விரதமிருந்து வழிபட்டு வருவதும் சிறந்த பரிகாரம் ஆகும். மஞ்சள் நிற ஆடைகள், கைகுட்டைகள் மற்றும் துண்டுகளை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

துலாம் முதல் மீன‌ம் வரையிலான ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
Next articleமஹா குருப்பெயர்ச்சி – கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்? பாகம் 2