கர்ப்பிணிகளுக்கு அம்மை ! அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன !

0

அம்மை நோய்
கோடைக்காலம் வந்துவிட்டது. கூடவே அழையா விருந்தாளியாக விதவிதமான அம்மை நோய்களும் சேர்ந்தே வந்துவிடும். இந்த அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மைதான் உயிர் குடிக்கும் ஒரு அம்மையாக இருந்து வந்தது. பெரியம்மைக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்திவிட்டோம்.

தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன?
சின்னம்மை என்றழைக்கப்படும் சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக வருமே…)
மணல்வாரி அம்மை என்றழைக்கப்படும் மீசில்ஸ்
பொன்னுக்கு வீங்கி என்றழைக்கப்படும் மம்ப்ஸ்
அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன?
அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத் தான் பரவுகின்றன.

அதனால்தான் அம்மை நோயை “பிராப்லெட் இன்ஃபெக்ஷன்” என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து “வைரஸ் கிருமிகள்” காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது. இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு “தொற்று நோய்” என்று சொல்கிறோம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய்
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். சாமி குத்தம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமில்லை, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான ட்ரீட்மென்ட் கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்.

அம்மை நோய்க்குத் தடுப்பூசிகள்
சின்னம்மைக்குக்கூட தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டது. குழந்தைப் பருவத்தின் ஓரிரு ஆண்டுகளிலேயே போடப்படும் இந்தத் தடுப்பூசியால், வாழ்நாள் முழுவதும் நோய் பற்றிய பயம் இன்றி இருக்கலாம்.
எம்.எம்.ஆர். என்று சொல்லப்படும் முத்தடுப்பு ஊசியால் மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி முதலிய அம்மைகள் வராமல் தடுக்கலாம்.

குழந்தை பிறந்து ஒன்பதாம் மாதத்தில் “மீசல்ஸ் வேசின்” என்ற ஊசி மணல்வாரிக்காகத் தனியாகப் போடப்படுவது. இந்த தடுப்பூசிகளை டாக்டரின் ஆலோசனைப்படி தவறாமல் போட்டுக் கொண்டாலே அம்மை பற்றிய பயமில்லாமல் இருக்கலாம்.

தெரிந்து கொள்வது எப்படி?
சின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும். பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும்.
சின்னம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால் நோயின் வீரியத்திலிருந்தும், பக்க விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.

ட்ரீட்மென்ட் சரியாக எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சின்னம்மை ஒரு முறை ஏற்பட்டால், அது ஆயுளுக்கும் திரும்ப வராது.

மணல்வாரி அம்மை வந்தாலும் சளி, இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் இருக்கும். தாடையின் உள்பகுதிகளில் சிவப்பு கலந்த வெண் புள்ளிகள் தோன்றுவதுதான் இந்த நோயின் அறிகுறி.

இந்த அம்மைக்கும் சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளாவிட்டால் வயிற்றுப்போக்கு, காதில் சீழ் வடிவது, நிமோனியா போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

காதின் கீழ்ப்புறம், தாடையின் கீழ்ப்புறம் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளைத் தாக்கக்கூடியது, “பொன்னுக்கு வீங்கி” அம்மை. தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், வாயைத் திறக்கும்போது வலி, காதின் கீழ் வலியுடன் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். மருந்து மாத்திரைகள் மூலமே வலியையும், வீக்கத்தையும் குறைக்கலாம்.

அம்மையின்போது என்ன சாப்பிடலாம்?
உணவில் காரம், புளிப்பைத் தவிர்ப்பது நல்லது. பழரசம், கஞ்சி, மோர், பழங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவை உடம்புக்கு மிகவும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் டாக்டரின் ஆலோசனையும் உங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகர்ப்பத்தடை ஆப்ரேஷன் என்றால் என்ன! எப்போது கருத்தடை ஆப்ரேஷனைச் செய்யலாம்!
Next articleஉங்க ராசிக்கு இந்த செடியை வளர்த்தால் யோகம் தான்!