கர்ப்பத்தடை ஆப்ரேஷன் என்றால் என்ன! எப்போது கருத்தடை ஆப்ரேஷனைச் செய்யலாம்!

0

கர்ப்பத்தடை ஆப்ரேஷன் என்றால் என்ன?
இந்த ஆப்ரேஷனில், ஒரு பெண் கருத்தரிப்பது தடை செய்யப்படுகிறது. இது மிகவும் எஃபெக்டிவ்வான முறையாகும். 50 சதவீத பெண்கள், தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனே கருத்தடை ஆப்ரேஷன் செய்து கொள்கிறார்கள். கருத்தடை ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்கள், அந்த முடிவை குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்துவிடுங்கள். உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இது குறித்து நீங்கள் பேசுவதற்கு இந்தக் கால அவகாசம் உதவும். இனிமேல் குழந்தை வேண்டவே வேண்டாமென்று முடிவெடுத்தவர்களுக்கு இந்த முறை சரி. எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு கருத்தடை சாதனம் (ஐயுடி), கருத்தடை மாத்திரை போன்றவைதான் சரியான வழி!

பெண் கருத்தடை ஆப்ரேஷன் என்றால் என்ன?
கருக்குழாயை கட் செய்து அதன் முனையை தையலால் முடிபோட்டுவிடுவது. இந்த ஃபேமிலி பிளானிங் முறைதான் பாதுகாப்பான, பர்மனெண்ட்டான பெண்களுக்கான கருத்தடை ஆப்ரேஷன்.

இந்த கருக்குழாய் (ஃபேல்லோபியன் டியூப்) கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் உருவாகியிருக்கும். கரு முட்டையும், விந்தணுவும் இந்த கருக்குழாயின் வழியாக உள்ளே சேர்ந்து கருத்தரிக்க ஆரம்பிக்கும். இந்த இரண்டு கருக்குழாய்களும் இந்த ஆப்ரேஷனினால் அடைபட்டுவிட்டால், கருமுட்டையால் இந்த குழாயினுள் நுழைய முடியாது. விந்தணுவினாலும் கருமுட்டையைச் சென்றடைய முடியாது. நிறைய பெண்கள் இப்படி சேர்ந்து வரும் கருமுட்டைகளால் தாங்கள் குண்டாகி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது வெறும் மூட நம்பிக்கைதான். இதில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், கருமுட்டை மிகமிக நுண்ணியமானது. தவிர இது 48 மணி நேரத்தில் சிதைந்து போய்விடும்.

இந்த சர்ஜரியினால் உங்களுடைய வாழ்க்கைத் துணைவரின் தாம்பத்ய சுகம் குறையாது. இந்த சர்ஜரிக்குப் பிறகு கருத்தரித்து விடுவோமோ என்ற பயமில்லாமல் தாம்பத்யத்தில் ஈடுபட முடிவதால், தங்களுடைய தாம்பத்ய சுகம் அதிகரித்திருப்பதாக நிறைய தம்பதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போது இந்த கருத்தடை ஆப்ரேஷனைச் செய்யலாம்?
பொதுவாக நார்மல் டெலிவரி மூலம் குழந்தை பிறந்த பெண்களுக்கு, குழந்தை பிறந்த 1-2 நாட்களில் இந்த ஆப்ரேஷன் செய்யப்படும். இந்த ஆப்ரேஷனைச் செய்வதற்கு முன்னால், பிறந்துள்ள குழந்தையின் ஹெல்த்தை, குழந்தை நல நிபுணரிடம் செக் செய்து கொள்வது நல்லது.

சிசேரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, இந்த கருத்தடை ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென்றால், சிசேரியன் செய்யும்போது இந்த ஆப்ரேஷனையும் சேர்த்தே செய்துவிடுவார்கள். இப்படிச் செய்வதினால் வேறு எந்தப் பிரச்சினையும் வராது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் நலம் தேறுவதற்கான காலமும் அதிகரிக்காது.

இன்ட்ரவல் ஸ்டெரிலைசேஷன்!
இந்த வகை ஆப்ரேஷன் கர்ப்பமாக இல்லாதபோது செய்யப்படும். ஆனால் பொதுவாக மாதவிடாய் வந்தவுடன் செய்தால், அந்தப் பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

கருத்தடை ஆப்ரேஷன் எப்படி செய்யப்படுகிறது?
அனஸ்தீஷியா கொடுத்துவிட்டுதான் இந்த ஆப்ரேஷன் செய்யப்படும். இது ஜெனரல் அனஸ்தீஷியா அல்லது முதுகுத்தண்டில் செலுத்தப்படும் அனஸ்தீஷியாவாக இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு, கருப்பை சுருங்க 2-3 நாட்களாகும். அதனால்தான் வஜைனா வழியாக குழந்தை பிறந்த பெண்களுக்கு உடனே கருத்தடை ஆப்ரேஷனைச் செய்துவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் கருப்பை அப்போதும் விரிவடைந்த நிலையிலேயே தொப்புளுக்கு அருகே இருக்கும். தொப்புளுக்குக் கீழே ஒரு சிறிய 2-2.5 செ.மீ அளவு “கட்” செய்வார்கள். இந்த “கட்” வழியாக கருக்குழாயைக் கண்டுபிடித்து அவைகளை முடிபோட்டு விடுவார்கள். சிசேரியன் செய்யும்போது, அடி வயிறு ஏற்கெனவே திறந்து இருப்பதால் கருக்குழாய்களை சுலபமாக கண்டறிந்துவிடலாம்.

இரண்டு கருக்குழாய்களும் தைக்கப்பட்டு, முடிபோட்டு “கட்” செய்வார்கள். இந்த கருக்குழாய்கள் குணமானவுடன், துண்டிக்கப்பட்ட இரண்டு நுனிகளும் ஒன்றிலிருந்து ஒன்று வெகு தூரத்தில் இருக்கும். இதனால் விந்தணுவால் கருமுட்டைகளை எட்டவே முடியாது. இந்த கருக்குழாய்களைத் தைத்த பின்பு இந்தச் செய்முறை கம்ப்ளீட்டாகும். தொப்புளுக்குக் கீழே வெட்டப்பட்ட தோலை மூடி, தைத்து, மேலே பஞ்சு வைத்து டிரெஸ்ஸிங் செய்துவிடுவார்கள். இந்த ஆப்ரேஷன் செய்ய 15-லிருந்து 30 நிமிடங்ககள் வரை ஆகும். இதற்குப் பிறகு ஹாஸ்பிடலில் 2-3 நாட்கள் அதிகமாக தங்க வேண்டிவரும்.

கர்ப்பமாக இல்லாத பெண்ணுக்கு அடிவயிற்றில் ஒரு சிறிய “கட்” செய்து (mini laparotomy) கருக்குழய்களை முடிபோட்டுவிடுவார்கள். இப்போதெல்லாம் இதை லேப்ரோஸ்கோப்பி முறையால் செய்கிறார்கள். லேப்ரோஸ்கோப்பி வழியாக செய்தால் கருக்குழாயை அடைப்பதற்கு ஃபில்லோப் ரிங் அல்லது கார்ட்ரி செய்வார்கள்.

கருத்தடை ஆப்ரேஷனுக்குப் பிறகும் கர்ப்பம்!
இந்த கருத்தடை ஆப்ரேஷனுக்குப் பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ரிஸ்க் சிறிதளவே. ஆயிரத்தில் 4-6 பெண்கள் கருத்தரிக்கலாம். இது எப்படி நிகழ்கிறது என்றால், வெட்டப்பட்ட கருக்குழாய்கள் வளர்ந்து இணைந்துவிடும். இது தன்னாலேயே ஆவதால் இந்த முறையைப் பயனற்ற முறை என்று சொல்லிவிட முடியாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசமந்தா, என்ன இப்படி மாறிவிட்டாரா? கவர்ச்சி உடையில் ரசிகர்களை கலங்கடித்தார்!
Next articleகர்ப்பிணிகளுக்கு அம்மை ! அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன !