கனடாவின் கால்கரி நகரில் வணிக வளாகம் ஒன்றில் அமைந்துள்ள பெண்களின் கழிவறையில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்கரி நகரில் அமைந்துள்ள CORE வணிக வளாகத்தில் பெண்கள் கழிவறை ஒன்றில் அடைப்பு ஏற்பட்டதாக கூறி பராமரிப்பு பணியாளர் ஒருவர் சென்றுள்ளார்.
குறித்த நபர் கழிவறையுடன் ஒட்டிய சுவற்றை உடைத்து சோதனையிட முயன்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த சுவற்றில் ஆணின் சடலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உடனடியாக அவர் வணிக வளகா நிர்வாகிகளுக்கும் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த கால்கரி பொலிசார் மீட்பு குழுவினரின் உதவியுடன் சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.
குறித்த சடலமானது எத்தனை காலம் அதில் இருந்தது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரிய வரும் எனவும், கொலையா என்பது தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் கால்கரி காவல்துறை செய்தி தொடர்பாளர் எம்மா தெரிவித்துள்ளார்.
உடற்கூறு சோதனை இந்த வார இறுதியில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சடலத்தின் அடையாளம் இதுவரை கண்டுபிடிக்காததால் உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது தாமதமாகலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சுவற்றுக்குள் எப்படி அவர் சிக்கினார் என்பது மர்மமாகவே உள்ளது என CORE வணிக வளாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் காவல்துறைக்கு போதிய ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.




