ஆரோக்கியம் தரும் அருகம் புல்!

0

‘ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ்ந்து வாழையடி வாழையென பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’என புதுமண தம்பதிகளை பெரியவர்கள் வாழ்த்துவர். அருகு வேர் பாதாளம் வரை பாய்ந்து உயிரை தன்னுள் அடக்கி சாகா மூலிகையாக திகழ்வதை அறியலாம். தம்பதிகள் இருவரும் ஒருவருள் ஒருவரென கணவர் உயிரை மனைவியும் மனைவி உயிரை கணவனும் உள் அடக்கி வாழ்வது என்பது இதன் பொருளாகும்.

மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்ணாமலேயே உடல் நோய் நீக்கும் ஓர் உயிர் மூலிகையாகும்.‘வினாயகனைத் தொழவும் அருகைத்தேடு, அழுவதை யொழிக்கவும் அருகைத்தேடு, காலை கல்லும், மாலை புல்லும் ஆளை வெல்லும்; காலை புல்லும்,மாலை கல்லும் ஆளைக்கொல்லும்’ என்பது பழமொழி. அதாவது, அதிகாலை எழுந்து மலை ஏறுவதும், மாலையில் புல்லில் படுப்பதும் உடற்பயிற்சி பெறுவதுடன் ஆரோக்கியம் தரும்.

காலையில் புல்லில் படுத்து மாலையில் மலை ஏறுவது உடல் நலம் கெடுவதோடு, உயிரை அழிக்க ஏதுவாகும். அருகம் புல்லை சுத்தம் செய்து அதன் சாற்றை குடித்துவர நமக்கு பித்தம் மற்றும் வாத நோய்கள் எதுவும் அணுகாது.

அருகம் வேரை கணு நீக்கி புன்னைக்காயளவு அரைத்து கால் லிட்டர் பசும்பாலில் கலந்து தினசரி காலையில் தொடர்ந்து ஒரு மண்டலம்(48நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நரை நீங்கி இளமை திரும்பும். உடல் இறுகி வலிமை பெறும். அருகன் கிழங்கை காய வைத்து இடித்து பொடியாக்கி, சம எடை சர்க்கரை கலந்து காலை மாலை இரு வேளை 150 மில்லி கிராம் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும்.

அருகம் புல் கொழுந்தை சுத்தம் செய்து அரைத்து 5 கிராம் அளவு காலையில் அருந்த வாத, பித்த கபநோய்கள் தீரும். அருகம் புல் ஒரு பிடி சுத்தம் செய்து நன்கு அரைத்து காலையில் குளிர்ந்த நீரில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் நாட்பட்ட பேதி நிற்கும்.

அருகம் புல் வேர் முதல் நுனிவரை ஒரு பிடி எடுத்து சுத்தம் செய்து அரைத்து தேவையான அளவு தண்ணீரில் கலந்து ஐந்து நட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் சூதக பேதி, பின் ஏற்படும் பேதி, நாட்பட்ட பேதியும் நிற்கும். உஷ்ணங்கள் தணியும். பித்த நோய்கள் தீரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெற்றிலையின் மருத்துவ குணநலன்கள்!
Next articleசிவபெருமான் ஏன் மரணத்தின் கடவுளான எமதர்மனை மார்பில் மிதித்து கொன்றார் தெரியுமா!