நெல்லிக்காய் செலவு குறைவு சத்துக்கள் அதிகம்!
ஆப்பிள் பழம் ஒன்றிலுள்ள சத்துகளைவிட அதிகளவான சத்துகள் கொண்டநெல்லிக்காயின் சுவையும், கண்ணைக் கவரும் பச்சை நிறமும் அதிலுள்ள சத்துகள் காரணமாக ஒளவை முதல் சித்தர்கள் வரை அதைக் கொண்டாடினார்கள். இவ்வாறாக நெல்லிக்காயின் மருத்துவப் பயன்கள் பற்றி சித்த மருத்துவர் சோ.வித்யா கூறும் கருத்துக்களை நோக்குவோம்.
நெல்லிக்காயில் வேறு எந்தக் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி நிறைந்துள்ளதனால் வைட்டமின் சி-யின் இருப்பிடமாக இது கருதப்படுகின்றது. இதனைவிட வைட்டமின் ஏ மற்றும் பி, 50 மி.கி கல்சியம்., 20 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் 1.2 மி.கி இரும்புச்சத்து என சத்துகளின் களஞ்சியமாக இருக்கிறது நெல்லிக்கனி.
இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்துவிடுவதனால் உங்களுக்கு மாரடைப்பு வருவதனை தடுக்க முடியும்.
காட்டு நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வரும் போது, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதுடன் அழகான சருமத்தையும் பெறமுடியும்.
நெல்லிக்கனியை உண்பதன் மூலம் ஒரு மனிதனுக்கு தினசரி தேவையான 50 மி.கி அளவு வைட்டமின் ‘சி’ எளிதில் கிடைக்கின்றது.
தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்து வரும் போது உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி, உடலின் நிறை குறைவடையும்.
சக்கரை நோய்க்கு சிறந்த மருந்து அரு நெல்லி (அரை நெல்லி)யின் மருத்துவ பயன்கள்
நெல்லிக்காய் தைலம்
நெல்லிக்காய் தைலம் முடி கொட்டுவதை நிறுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
பச்சை நெல்லிக்காய், கறிவேப்பிலை, துளசி மற்றும் கொட்டை நீக்கிய முற்றிய கடுக்காய் ஆகியவற்றைச் சமமான அளவில்; சேர்த்து நன்கு அரைத்து அதனை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அளவு அதிகமான தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தினமும் கேசத்தில் தடவிவரும் போது முடி உதிர்வு முழுமையாக இல்லாது போகும்.
நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் சாற்றினைத் தயாரித்து தினமும் பருகி வருவதன் மூலம் சர்க்கரைநோய், ரத்தசோகை, குடல் புண் மற்றும் கண் நோய்கள் குணமாகும்.
கொட்டை நீக்கப்பட்ட 10 பெரிய நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து அதனை வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேவையான அளவு தேன் மற்றும் ஒரு இளநீர் சேர்த்து நெல்லிக்காய் சாறு தயாரித்து பருகலாம்.
இன்று பெரும்பாலானவர்களுக்கு பெரும் தொல்லை தரும் விஷயமாக காணப்படக் கூடிய நரை முடியானது உடல்ரீதியாக பிரச்னை எதனையும் தராது எனினும் மனதளவில் சிறு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளதனால் இதனை நீக்குவதற்கு நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியனவற்றை சமமான அளவில் எடுத்து அதில் சிறிதளவான எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை தினமும் இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவுவதன் மூலம் விரைவில் இளநரை நீங்கி கூந்தல் கறுப்பாக மாறும்.
மேலும், பாலாடையுடன் நெல்லிக்காய் சாற்றினைக்க் கலந்து தடவிவருவதன் மூலம் உதடு வெடிப்பு நீங்கும்.
நம் முன்னோர்களும், சித்தர்களும் தினம் ஓரு நெல்லிக்கனி சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர். இதனால் நெல்லிக்கனிக்கு ‘காய கல்பம்’ என்ற இன்னொரு பெயரும் வழங்கப்படுகின்றது. எனவே, நாமும் நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்வோம்.
By: Tamilpiththan