வலைத்தளங்கள் எந்தளவு மனித வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது என்றால், எங்களின் அன்றாட வேலைகளை இப்படித்தான் செய்யவேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளும் அளவு எங்களுக்குள் ஊடுருவியிருக்கிறது. ஆடை தெரிவு செய்வதில் இருந்து அடுத்தவீட்டாரிடம் அன்பாக பழகுவது எப்படி என்பது வரைக்கும் வீடியோவாக பார்த்து தெரிந்துகொள்ள சமூக வலைத்தளங்கள் வந்துவிட்டது. அதிலும் Youtube தளத்தில் இல்லாத காணொளிகளே இல்லை.
சீனாவை சேர்ந்த யியா என்ற பெண் Youtube செனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் வித்தியாசமாக மற்றும் எளிமையான முறையில் உணவு தயாரிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சுமார் 4 கோடி பேர் யியாவின் Youtube செனல் ஐ பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில், காலியான குளிர்பான டின்னை கொண்டு பொப்கோர்ன் செய்வது எப்படி என வீடியோ ஒன்றை யியா தனது Youtube செனலில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த செசே என்ற 14 வயது சிறுமி, தனது தோழி சியாவுடன் சேர்ந்து அதேபோல் பொப்கோர்ன் செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்போது, அவர் குளிர்பான டின்னுக்கு பதிலாக மதுபான டின்னை பயன்படுத்தியுள்ளார். இதனால் அந்த டின், திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிறுமிகள் இருவரும் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். செசே 93 சதவீத தீக்காயத்துடனும், சியாவு 13 சதவீத தீக்காயத்துடனும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், செசே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறுமியின் உயிரிழப்புக்கு Youtube இல் வீடியோவை பதிவிட்ட யியாதான் காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எச்சரிக்கை வாசகம் குறிப்பிடாதது தவறுதான் என்றாலும், சிறுமி, தான் பயன்படுத்திய அதே கருவிகளை பயன்படுத்தவில்லை என்று யியா விளக்கமளித்துள்ளார். எனினும் சிறுமியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள அவர், இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளார்.