Thirukkural Idukkan Azhiyamai Adhikaram-63 (idukkan aliyamai) திருக்குறள் இடுக்கணழியாமை அதிகாரம்-63 அரசியல் பொருட்பால் Thirukkural Idukkan Azhiyamai Adhikaram-63 Arasiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-63 அரசியல் பொருட்பால். இடுக்கண் அழியாமை Idukkan Azhiyamai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Idukkan Azhiyamai Chapter-63.
Thirukkural Idukkan Azhiyamai Adhikaram-63

திருக்குறள் பா: 621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
kural 621: itukkan varungaal nakuka adhanai atuththoorvadhu aqdhoppa thil
திரு மு.வரதராசனார் பொருள்:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
மணக்குடவர் பொருள்:
தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை. இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.
கலைஞர் பொருள்:
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
சாலமன் பாப்பையா பொருள்:
நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.
திருக்குறள் பா: 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
kural 622: vellath thanaiya itumpai arivutaiyaan ullaththin ullak ketum
திரு மு.வரதராசனார் பொருள்:
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
மணக்குடவர் பொருள்: வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும். இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.
கலைஞர் பொருள்: வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.
சாலமன் பாப்பையா பொருள்: வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
திருக்குறள் பா: 623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
kural 623: itumpaikku itumpai patuppar itumpaikku itumpai pataaa thavar
திரு மு.வரதராசனார் பொருள்:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
மணக்குடவர் பொருள்: துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர். இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.
கலைஞர் பொருள்: துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
சாலமன் பாப்பையா பொருள்: வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.
திருக்குறள் பா: 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
kural 624: matuththavaa yellaam pakatannaan utra itukkan itarppaatu utaiththu
திரு மு.வரதராசனார் பொருள்:
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
மணக்குடவர் பொருள்: இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.
கலைஞர் பொருள்: தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
சாலமன் பாப்பையா பொருள்: செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
திருக்குறள் பா: 625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
kural 625: atukki varinum azhivilaan utra itukkan itukkat patum
திரு மு.வரதராசனார் பொருள்:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
மணக்குடவர் பொருள்: மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும். இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.
கலைஞர் பொருள்: துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
திருக்குறள் பா: 626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
kural 626: atremendru allar patupavo petremendru ompudhal thetraa thavar
திரு மு.வரதராசனார் பொருள்:
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
மணக்குடவர் பொருள்: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.
கலைஞர் பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.
சாலமன் பாப்பையா பொருள்: பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.
திருக்குறள் பா: 627
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
kural 627: ilakkam utampitumpaik kendru kalakkaththaik kaiyaaraak kollaadhaam mel
திரு மு.வரதராசனார் பொருள்:
மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.
மணக்குடவர் பொருள்: உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர். இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.
கலைஞர் பொருள்: துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா பொருள்: உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.
திருக்குறள் பா: 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
kural 628: inpam vizhaiyaan itumpai iyalpenpaan thunpam urudhal ilan
திரு மு.வரதராசனார் பொருள்:
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
மணக்குடவர் பொருள்: இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.
கலைஞர் பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
சாலமன் பாப்பையா பொருள்: உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
திருக்குறள் பா: 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
kural 629: inpaththul inpam vizhaiyaadhaan thunpaththul thunpam urudhal ilan
திரு மு.வரதராசனார் பொருள்:
இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.
மணக்குடவர் பொருள்: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.
கலைஞர் பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
சாலமன் பாப்பையா பொருள்: தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
திருக்குறள் பா: 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
kural 630: innaamai inpam enakkolin aakundhan onnaar vizhaiyunj chirappu
திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
மணக்குடவர் பொருள்: இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின் அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம். மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.
கலைஞர் பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.
Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)