‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் உருவாக ஆரம்பித்து கிடப்பில் போடப்பட்ட ஒரு சில படங்களில் மிகப்பெரும் பட்ஜெட் படமான “மருதநாயகம்” திரைப்படமும் “தலைவன் இருக்கிறான்” திரைப்படமும் உள்ளடக்கம்.
ஒருசில வருடங்களுக்கு முன்னர் “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை தொடங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். இருந்தும், அந்தப் படம் சில பல காரணங்களால் படமாக்கப்படாமல் இருந்த நிலையில், அந்தக் கதையை மீண்டும் தூசி தட்டித் தொடங்கவுள்ளார் கமல். இந்தப் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணியை கவனிக்கவுள்ள நிலையில், கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் கமல் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
அரசியலில் மிக மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நடிகர் கமலுக்கு உதவும் வகையில் இந்தப் படம் வெளிவரலாம் என்றும், “தலைவன் இருக்கிறான்” திரைக்கதை அதீத அரசியல் களம் கொண்டதாக பின்னப்பட்டுள்ளதாகவும், இதனால் தான், தனது தீவிர அரசியல் செயற்பாட்டிற்கு இந்தப் படம் பெரிதும் பக்கபலமாக அமையும் என்ற நம்பிக்கையில் படத்தை திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் கமல் இறங்கியிருப்பதாகவும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.
இது இப்படியிருக்க, “தேவர் மகன்- 2” தான் “தலைவன் இருக்கிறான்” என்ற தலைப்பில் படமாகவுள்ளதாகவும், நீண்ட நாட்களாக திரையில் மின்னாமல் சிக்கலில் சிக்கிக் கிடக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு இந்தப் படத்தின் மூலமாக மீண்டும் ரசிகர்களை கவர்ந்துகொள்ளப் போவதாகவும் தெரிய வருகின்றது. அதிலும், முக்கிய வேடமொன்றை ஏற்று அவர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக விஷயமறிந்த தரப்பு சொல்கின்றது.




