“இந்தியன்-2” திரைப்படத்தில் நாயகியாகி ‘உலகநாயகன்’ கமல்ஹாசனுடன் இணைந்து மும்முரமாக நடித்துக்கொண்டிருக்கின்றார் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர் தற்போது பொலிவூட் திரையுலகிலும் தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் நடிகை ரகுல் பிரீத் சிங் பங்கெடுத்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது. அதில் தனது பிரத்தியேக மற்றும் திரைத்துறை சார்ந்த வாழ்க்கை முறை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், “எதிலும் இவ்வளவு தான் என்னால் முடியும். இதுதான் எனது எல்லை என்று முடிவு செய்வது எனக்கு பிடிக்காது. தினமும் புதிது புதிதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.
நேற்று மாதிரியே இன்றும் நடந்தால் அதில் என்ன விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது செய்வேன். அதுதான் சினிமாவில் இத்தனை நாட்களாக என்னை வைத்து இருக்கிறது. ஆரோக்கியத்துக்கும், உடற்பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுப்பேன். நான் சாப்பாட்டு பிரியை. எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வேன் என்று தனது உடல் அழகு பற்றியும், நடிப்பு பற்றியும் கூறினார் ரகுல் பிரீத் சிங்.
அத்துடன், தான் வாங்கும் சம்பளம் குறித்து எழுகின்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நான் சம்பள விடையத்தில் விட்டுக்கொடுப்பற்றவள் என்று பேசிக்கொள்கின்றனர். படங்களில் நான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு உரிய வகையில் எந்தளவுக்கு பாடுபட வேண்டுமோ, அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு நடிக்க தயாராகவுள்ளேன். ஆனால், அதற்காக எவ்வளவு சம்பளம் தர முடியும்….? அல்லது முடியாது என்பதை ஒப்பந்த காலத்திலேயே கூறிவிட வேண்டும்.
ஒப்பந்தப்படி முடிவு செய்யப்பட்ட சம்பளத்தை தர மறுத்தால் நான் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இப்படியான செயற்பாடுகள் எனக்கு பிடிக்காத விஷயம். பட ஒப்பந்தப்படி, படக்குழுவினர் கேட்பதை சரிவர முடித்துக் கொடுத்த பின்னர் எனக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தை அவர்கள் தர வேண்டும். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் நான் விடாப்பிடியாக எனது ஊதியத்தை வாங்கிக்கொள்வேன். அதை வைத்து, சம்பள விஷயத்தில் நான் கெடுபிடியாக இருக்கிறேன் என்று யாரும் என்னை விமர்சித்தால் அது குறித்து கவலைப்பட மாட்டேன்” என்கிறார் ரகுல் பிரீத் சிங்.




