ஜேர்மன் நகரம் ஒன்றில் ஒருவர் வளர்த்த நாகப்பாம்பு ஒன்று தப்பி வெளியில் சுற்றித்திரிவதையடுத்து, அந்த நகரிலுள்ள 30 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேற்கு ஜேர்மன் நகரமாகிய Herneஇல் உள்ள ஒரு வீட்டில், ஒருவர், 20 விஷப்பாம்புகள் வரை வளர்த்து வந்துள்ளார்.
அவற்றிலிருந்து தப்பிய ஒரு பாம்பு அந்தப்பகுதியில் எங்கோ சுற்றிக்கொண்டிருப்பதையடுத்து அப்பகுதியில் உள்ள 30 பேர் பாதுகாப்பு கருதி தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுமார் 4.6 அடி நீளமுடைய அந்த விஷப்பாம்பு, அதை வளர்ப்பவரின் வீட்டிலுள்ள படிக்கட்டில் நடமாடுவதை மக்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
உள்ளூர் பொலிசார் இன்னமும் அந்த பாம்பு அதே கட்டிடத்தில்தான் இருக்கும் என தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
விலங்கு நிபுணர்கள், அந்த வீட்டைச் சுற்றிலும் மாவைக் கொட்டி வைத்தும், ஒட்டும் நாடாக்களை ஆங்காங்கு ஒட்டி வைத்தும் அந்த பாம்பின் நடமாட்டத்தை அறிய முயற்சி செய்து வருகிறார்கள்.
பாம்புகளை வளர்த்த அந்த நபர், இனி பாம்புகளை வைத்திருக்கக் கூடாதென அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.