ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தவர்களின் தகவல்கள் அனைத்தையும் புலனாய்வாளர்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஐ.எஸ். பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்புகளை பேணியவர்களின் அனைத்து தகவல்களும் நுவரெலிய பிளெக்பூலில் அமைந்திருந்த சஹ்ரானின் பயிற்சி நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மடிக்கணனி மூலம் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
அந்த கணனியை கண்டு பிடிப்பதற்கு முன்னர் அரச புலனாய்வு பிரிவின் தகவல்களின்படி ஐ.எஸ். பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்புடைய சிறு பிள்ளைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றை நடத்திவந்த இளைஞனொருவன் பிபிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் காத்தான்குடியை சொந்த இடமாக கொண்டவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். அவரின் கைத்தொலைபேசி பொலிஸார் கைப்பற்றிய பின் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். தொலைபேசியை ஆராய்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் சிரியாவின் ஐ.எஸ். பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளார் என சாட்சியுடன் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதேவேளை நுவரெலியாவில் கைப்பற்றிய சஹ்ரானின் மடிக்கணனியில் உள்ள பதிவுகள் ஐ.எஸ். பயங்கரவாத வலையமைப்பின் உண்மையான வலையமைப்புடன் தொடர்புடையது என அரச புலனாய்வு பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கணனி ஆதாரத்தின் மூலம் அந்த வலையமைப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையை தற்போது புலனாய்வு பிரிவினருடன் இணைந்து குற்ற விசாரணைத் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றது.
நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கணனியில் ஐ.எஸ். வலையமைப்பில் உள்ள பெயர்களில் பிபிலையில் கைதுசெய்யப்பட்ட நபரின் பெயரும் உள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சட்டவிரோதமாக சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து அந்நாட்டில் தங்கியுள்ள ஐ.எஸ். முக்கியஸ்தர் ஒருவரின் பெற்றோர்கள் குற்ற விசாரணைத் திணைக்களத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் தனது பிள்ளையை பார்க்க சிரியாவுக்குச் சென்று ஒன்றரை வருட காலம் அங்கு தங்கியிருந்ததாக தெரிய வந்துள்ளது. தனது மகன் அந்நாட்டில் மனைவி பிள்ளைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




