சென்னை பாலவாக்கம் கடற்கரையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை தான் டி.ஜி.பி மகள் என்று கூறி பெண் ஒருவர் மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பாலவாக்கம் கடற்கரைக்கு நேற்றிரவு காரில் வந்த நபர்களுக்கு கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து, காரில் இருந்த பெண் மற்றும் ஆண் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காருக்குள் போலீசார் எட்டிப் பார்த்த போது உள்ளே மதுபாட்டில் இருந்துள்ளது. இதனை அடுத்து எப்படி தன் காருக்குள் எட்டிப் பார்க்கலாம் என்று கூறி அந்த பெண் வாக்குவாதத்தை தொடர்ந்தார். மேலும் தான் டி.ஜி.பியின் மகள் என்றும், தான் நினைத்தால் உடனடியாக காவலரை பணியில் இருந்து நீக்க முடியும் என்றும் அந்த பெண் மிரட்டியுள்ளார்.
இதனிடையே காவலரை மிரட்டிய பெண், ஏ.டி.ஜி.பி ஒருவரின் மகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.