ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா ஜிதேந்திரா தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே உயிர் இழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளர் டாக்டர் ரீட்டா ஜிதேந்திரா. அவர் ஸ்ரீநகரில் உள்ள தூர்தர்ஷன் கேந்திரா நிலையத்திற்கு நேற்று காலை சென்றார். தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பான குட் மார்னிங் ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குட் மார்னிங் ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் நன்றாக பேசிக் கொண்டிருந்த ரீட்டா திடீர் என்று இருக்கையின் பின்னால் சாய்ந்து மேலே பார்த்தபடி மூச்சுவிடத் திணறினார். மூச்சு திணறல் ஏற்பட்ட வேகத்தில் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் ஆகிவிட்டார். இந்த சம்பவம் காலை 8.30 மணி அளவில் நடந்துள்ளது.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மிகவும் ஆரோக்கியமாக ரிவி நிகழ்ச்சிக்கு வந்தவர் பிணமாக திரும்பி வந்ததை பார்த்த அவரின் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.