இந்தியாவின் கேரள மாநிலத்தில் 16 வயது மகளை கொன்று கிணற்றில் தள்ளிய தாயாரையும் அவரது காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் கரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் 34 வயதான மஞ்சு. கணவர் இறந்த நிலையில் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
16 வயதான மகள் மீரா பத்தாம் வகுப்பு படித்து வருவதால் அவருக்காக பாடசாலையின் அருகாமையிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். மீரா, வீட்டில் இருந்தபடி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.
மஞ்சுவின் கணவர் இறந்த பின்னர், அவரது நண்பரான அனிஷ்(29) இவர்களது வீட்டிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.
அடிக்கடி வந்து சென்றதில் மஞ்சுவுக்கும், அனிஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
வீட்டில் மீரா இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பது வழக்கம். மீரா பள்ளிக்கு செல்லாவிட்டால், கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்படும். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் மீராவை கொலை செய்ய அவரது தாயார் மஞ்சுவும், அனிஷும் முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த 10 ஆம் திகதி இருவரும் சேர்ந்து மீராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்த பாழும் கிணற்றில் உடலை வீசி விட்டு வந்து விட்டனர்.
பிணம் நீரில் மிதக்காமல் இருக்க பிணத்துடன் சிமெண்ட் கட்டைகளையும் சேர்த்து கட்டி இருந்தனர்.
இதனையடுத்து மஞ்சு, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவர்களிடம் மீராவை காணவில்லை எனவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் ஓடி விட்டார் எனவும் கூறி நம்ப வைத்துள்ளார்.
மட்டுமின்றி, தமது மகளை தேடி கண்டுபிடிக்க செல்வதாகவும் அவர்களிடம் கூறியுள்ளார். மறுநாள் முதல் மஞ்சுவையும் காணவில்லை.
இதனிடையே மஞ்சுவின் தாயார் வல்சலா, 2 நாட்களுக்கு பிறகு மஞ்சுவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
அப்போது மஞ்சுவின் செல்போன் உபயோகத்தில் இல்லை என்று பதில் வந்தது. மஞ்சு தமிழகத்திற்கு செல்வதாக கூறிய நாள் முதல் அனிஷும் காணவில்லை.
இது வல்சலாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நெடுமங்காடு பொலிசாரிடம் புகார் செய்துள்ளார்.
பொலிசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு, அவரது மகள் மீரா ஆகியோரை தேடினர். இதனிடையே பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,
மஞ்சு நாகர்கோவிலில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. அவருடன் அனிஷ் மட்டுமே இருப்பதை அறிந்த பொலிசார் மீராவை அவர்கள் என்ன செய்தனர்? என்பதை அறிந்து கொள்ள இருவரையும் பிடித்து வந்து விசாரிக்க முடிவு செய்தனர்.
அப்போதுதான் மஞ்சுவும், அனிசும் சேர்ந்து மீராவை கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய கொடூர தகவல் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் மீராவை கொன்று வீசிய கிணற்று பகுதிக்கு பொலிசார் அழைத்துச் சென்றனர். அந்த கிணற்றில் இருந்து 19 நாட்களுக்கு பிறகு மீராவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
பின்னர் பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில், மீரா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது உறுதியானது.
இதையடுத்து பொலிசார் மஞ்சு, அவரது கள்ளக்காதலன் அனிஷ் இருவரையும் கைது செய்துள்ளனர்.