பரபரப்பை ஏற்படுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை அடுத்த மாதம் நடத்தவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பல்வேறு விசாரணைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுடன் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் திணைக்களம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள், பொலிஸாரின் அடுத்தகட்ட திட்டங்கள் உட்பட முக்கிய தகவல்களை இந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களை அடக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குற்றச் செயல்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முக்கியமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்கள் குறித்தும் இதன்போது தகவல்கள் வெளியிடப்படும் எனவும் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸின் முன்னேற்றத்திற்காக ஊடகவியலாளர்களிடம் யோசனைகள் இருந்தால் அவற்றையும் பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தனது ஆலோசனையின் படி செயற்படுத்தப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் குற்றச் செயல்களை தடுப்பதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.