ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 விருச்சிகம் !

0

அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய அழகும், கட்டான உடலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! இது நாள் வரை 3, 9-ல் சஞ்சரித்த கேது, ராகு தற்போது ஏற்படும் மாறுதலால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதுமட்டுமின்றி குரு ஜென்ம ராசியிலும், சனி குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும்.

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது, சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் வீண் விரயங்கள், நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். குரு பகவான் வரும் 29-10-2019 முதல் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. இதுவரை தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு சொந்தமாக வீடு, கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் ஓரளவுக்கு லாபங்கள் அமையும்.

பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நினைத்தது நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருக்கும். பெரிய முதலிடுகளை ஈடுபடுத்தி அபிவிருத்தியை பெருக்கி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கு ஏற்ற உயர்வுகளை பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்துவார்கள். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு குரு பெயர்ச்சிக்குப் பின் (29-10-2019) நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியம் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உத்தியோகம்
செய்யும் பணியில் சில நிம்மதி குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெறும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். நம்பியவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். கொடுத்த பணத்தை பல்வேறு தடைகளுக்குப் பின்பே வசூலிக்க முடியும்.

அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் அரசு உதவிகள் கிடைப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. காய் கனிகளாலும், கால்நடைகளாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும்.

கலைஞர்கள்
இதுவரை பட்ட துயரங்கள் சற்றே ஒரு முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைக்கப் பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகள் சில தடைகளுக்குப் பின் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும். பயணங்களை குறைப்பதால் அலைச்சல்களும் குறையும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும். மங்களகரமான சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினரை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பூர்வீக வழியில் எதிர்பார்க்கும் லாபம் தாமதப்படும்.

மாணவ மாணவியர்
கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படும் என்பதால் கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். தேவையற்ற நட்புக்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 2-ல் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் இடையூறுகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.

ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் தேவையற்றப் பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். முருகப் பெருமானை வழிபடுவது அம்மனை வழிபடுவது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 2-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும்.

பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். ராகு, கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 2-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஏழரைசனி தொடருவதாலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் 29-10-2019 முதல் குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும்.

பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் சாதகப்பலன் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வியில் உயர சற்று கடின முயற்சிகளை செய்வது உத்தமம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 2-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாடும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 2-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 2-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதோடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல் ஏற்படாது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணி புரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாகவே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -1,2,3,9

நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை – செவ்வாய், வியாழன்

திசை – தெற்கு

கல் – பவளம்

தெய்வம்- முருகன்

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் !
Next articleசுகாதார அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!