ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கும்பம் !

0

எந்த பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு நிழல் கிரகமான ராகு 6லும், கேது 12லும் சஞ்சாரம் செய்கின்றனர். தற்போது ஏற்பட உள்ள ராகு கேது பெயர்ச்சியால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரளவுக்கு நற்பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். குரு 10-ல் சஞ்சரித்தாலும், லாபஸ்தானமான 11-ல் உங்கள் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும்.

29-10-2019 முதல் குரு லாபஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. உங்களுக்குள்ள கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்டபுடைய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதாரநிலை உயரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். எதிலும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் சற்றே குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை
பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஆகியவை உண்டாகும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

உத்தியோகம்
பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்
பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அரசியல்
பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். தலைவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்க்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். சேமிப்புகள் பெருகும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது, புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வீர்கள்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 5-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 11-ல் கேது உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் சனி 11-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிலும் லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது.

அன்றடாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 5-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 11-ல் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 11-ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது.

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 5-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 11-ல் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், சனி 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். 29-10-2019 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு கேது ஜென்ம ராசிக்கு 5, 11-ல் தன் சொந்த நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதாலும், குரு, சனி 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருப்பதால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது சஷ்டி விரதம் மேற்கொள்வது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 5-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 11-ல் கேது மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு, சனி 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலங்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேன்மையடையும்.

எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் யாவும் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல பல வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,7,8

கிழமை – வெள்ளி, சனி

திசை – மேற்கு

நிறம் – வெள்ளை, நீலம்

கல் – நீலக்கல்,

தெய்வம் – ஐயப்பன்

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5-ல் சஞ்சாரம் செய்வதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது, ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெண்குஷ்டம் சீக்கிரமாகவே மறைய இயற்கை முறைகள்.
Next articleராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மீனம் !