இரத்தத்தில் உள்ள சிவப்பு அனுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பழங்கள்!

0

இரத்தத்தில் உள்ள சிவப்பு அனுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பழங்கள்!

ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும் 7 பழங்கள்!

‘நம் உணவில் பழங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒவ்வொரு பழமும் தனித்துவம் நிறைந்த சத்துக்களை தனக்குள் கொண்டிருக்கிறது.‘இன்றைக்கு, நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன’ என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு. உணவின் மூலம் ரத்தம் உற்பத்தியாவதில்லை. உணவில் இருக்கும் இரும்புச்சத்தும் ரத்தம் உருவாக ஒரு காரணம். ரத்தத்தில் இருப்பது, ஹீமோகுளோபின். ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். அது நமக்கு உணவின் மூலமாகக் கிடைக்கிறது. உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும். இந்தச் சத்து, நாம் உண்ணும் எந்தெந்தப் பழங்களிலெல்லாம் கிடைக்கும்???

உலர்ந்ததிராட்சை
பொதுவாக, கருப்பு திராட்சை, பச்சை திராட்சை என இரண்டு வகைகள் உள்ளன. கருப்பு திராட்சையில் ஆந்தோசயனின் (Anthocyanin), பச்சை திராட்சையில் கேட்டச்சின் (Catechin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Antioxidants) உள்ளன. ரெஸ்வெரட்ரால் (Resveratrol) என்னும் வேதியல் பொருள் திராட்சையின் விதையிலும், தோலிலும் நிறைந்துள்ளது. இது, இதயம் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி வராமல் தடுக்க உதவும். ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் இதில் மூன்று மடங்கு அதிகம். 100 கிராம் உலர்ந்த திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டாலே இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

பேரீச்சை
100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள் உள்ளன; 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். கால்சியம் சிறிதளவு இருப்பதால் எலும்பு, பற்களுக்கு நல்லது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். ஏகப்பட்ட சத்துகள் நிறைந்துள்ள இந்தப் பழம் ஒரு வரம்.

மாதுளைப்பழம்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று, மாதுளை. நார்ச்சத்து நிறைந்தது. 100 கிராம் பழத்தில், 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் இதில் அதிகம். மாதுளம்பழச் சாற்றில் தேன் கலந்து தினமும் காலை உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மாதுளையைத் தொடர்ந்து சாப்பிட்டால், மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தோல் சுருக்கத்துக்குக் காரணமான செல்களின் டிஎன்ஏ-க்களை மாற்றி, புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், பாலியல் தொடர்பான நோய்களுக்கு இது அருமருந்து.

தர்பூசணி
தர்பூசணி புத்துணர்ச்சி, தரும் பழம் மட்டுமல்ல… வெயில் காலத்துக்கு ஏற்றதும்; உடல்நலத்துக்குச் சிறந்ததும் கூட. இது, உடலில் உள்ள வெப்பத்தையும் ரத்தஅழுத்தத்தையும் சரிசெய்யும். வைட்டமின் ஏ, தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவிகிதம் தண்ணீர், 7 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 0.24 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளன. இதில் உள்ள லைகோபீன் என்ற சத்து சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர் வீச்சில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

அத்திப்பழம்
ஜீரண சக்திக்கு உதவுவது அத்திப்பழம். நமக்குப் புத்துணர்ச்சியை தந்து நுரையீரலிலுள்ள அடைப்புகளை நீக்கும். தோல் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். இதில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதில் உள்ள க்ளோரோஜெனிக் (chlorogenic) அமிலம் உடலில் உள்ள இன்சுலினை அதிகரிக்கச் செய்து, சர்க்கரையைக் குறைக்கும். நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ரத்தப்போக்கைக் கட்டுபடுத்தும் வல்லமைகொண்டது.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் புரதம், கொழுப்பு மற்றும் மாவுச் சத்துகள் சிறிதளவே இருந்தாலும், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். இதன் கலோரி அளவு 51. நார்ச்சத்து 5.2% இருக்கிறது. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சிறிதளவு இருக்கிறது. 100 கிராம் கொய்யாவில் 0.27 மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலிமை பெறும். இதுவும் ஒரு வகையில் மலமிளக்கியாகச் செயல்படுகிறது. எனவே, குடல் சம்பந்தமான பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

சர்க்கரைபாதாமிபழம் (Apricot)
இந்தப் பழத்தின் பிறப்பிடம் கிரேக்க நாடு. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில், கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் குறைவாக உள்ளன. வைட்டமின்களும் சர்க்கரையின் அளவும் அதிகமாக இருக்கின்றன. நம் உடலில் ஆக்சிஜன் ரேடிக்கல் (Oxygen Radical) அதிகமாக இருந்தால், நோய்க்கு வழிவகுக்கும். ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் (Oxygen Radical Absorbance Capacity) ஆப்ரிகாட் பழத்துக்கு அதிகம். மேலும், இதில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாகவும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகமாகவும் இருக்கின்றன.

குறிப்பு:
எந்தப் பழத்தையும் சாப்பிடுவதற்கு முன்னர் உப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரமாவது ஊறவைத்து, பிறகு சாதாரண நீரில் நன்றாகக் கழுவி உண்ண வேண்டும். இப்படிச் செய்வது பழத்தின் மேற்புறத்தில் உள்ள பூச்சிக்கொல்லிப் படிமங்களை நீக்கிவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் சூடு அதிகம் உள்ளவரா நீங்கள்!! அப்படி என்றல் இதை செய்து பாருங்கள்!
Next articleநூறு நோய்களை தீர்க்கும் ஆறுபது வகையான மூலிகைப் பொடிகள்!!