யாழ்ப்பாணம், நவாலி அட்டகிரி பகுதியில் நான்கு வீடுகள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி பகுதியில் முகத்தினை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த உடமைகளை சேதப்படுத்தி, வீடுகளுக்கு தீ வைத்தனர்.
அத்துடன், ஒரு வீட்டில் நின்ற ஐஸ்கிறீம் விற்பனைக்கு பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இலக்க தகடுகள் மறைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பலே இந்த நாசக்கார செயலை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வன்முறை தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்று இரவு நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.