பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்த தமிழக அரசின் முடிவை யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் இல்லத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அதற்கு பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், `கவலைப்படாமல் இருங்க உங்களது மகன் விரைவில் வருவார் என்று முதல்வர் எனக்கு ஆறுதல் கூறினார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு . 28 ஆண்டு கால போராட்டம் எப்படி முடியும் என்று தெரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.
எனது மகன் சிறைக்குச் செல்லும்போது 19 வயது, இப்போது 47 வயது எனது குழந்தைக்கு. வயது, இளமை எல்லாம் போய்விட்டது. இருந்தாலும் இப்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமையில் அனைத்து அமைச்சர்களும் ஒன்றுகூடி 7 பேரின் குடும்பத்திற்கும் நிம்மதியை கொடுத்திருக்கிறார்கள்.
நான் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். யாரும் இதை தயவுசெய்து அரசியலாக்கிடாதீங்க. அரசியல் பண்ணிடாதீங்க. தமிழக அரசுக்கும் 7 பேரின் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார்.