உயர் இரத்த அழுத்தம் பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் !

0

எனக்கு தலைச்சுற்று இல்லை, தலையிடி இல்லை, களைப்போ சோர்வோ இல்லை, ஆனால் டாக்டர் பிரஸர் என்று சொல்கிறாரே” என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆனால் அதுதான் உண்மை. பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். எனவேதான் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்.

சிலர் அறிவதற்கு முன்னரே அதன் பாதிப்புகளால் இறந்து போகவும் கூடும்.

கடுமையான பாதிப்புகள்

எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.

பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.

பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.

சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.

விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.

கடுமையான நிலையின் அறிகுறிகள்

இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்.

உதாரணமாக:-

கடுமையான தலையிடி

மூக்கால் இரத்தம் வடிதல்

பார்வை மங்கல்

மூச்செடுப்பதில் சிரமம்

கால் வீக்கம்

போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.

பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்

யாருக்கு வரும்

எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.

வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.

அதீத எடையுள்ளவர்கள்

புகைப்பவர்கள்

அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.

தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.

கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.

எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.

பிரசரில் நான்கு நிலைகள் உண்டு. அவையாவன :-

சாதாரண அளவு 120/80 க்கு கீழ்

முன்நிலை 140/90வரை

நிலை 1 160/100வரை

நிலை 2 160/100 க்கு மேல்

உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.

அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.

தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.

பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு (Lipid Profile)

சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine)

குருதி உப்பு அளவுகள் (Serum Electrolytes)

ஈசிஜி (ECG)

ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney)

வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.

பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.

உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு போதிய இடம் கொடுங்கள்.

உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.

உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.

புகைத்தலைத் தவிருங்கள்.

மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.

உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுற்றுநோய் பற்றி தெரிந்துகொள்வோம் !
Next articleவாழ்க்கையில் செல்வத்தை ஈர்க்க இந்த ஒரு மந்திரமே போதுமானது! காதல் வெற்றி கடன் பிரச்சினை நீங்க!