திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பான சமீபத்திய புகைப்படம் வெளியாகி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் கருணாநிதிக்கு உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரின் உடல் நலம் குறித்து அறிவதற்காக, அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி இன்று மருத்துவமனையில் இருக்கும் கலைஞரை சந்திப்பதற்காக சென்னை வந்தார்.
ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தவர், கருணாநிதியை நேரில் பார்த்தார், இதுதொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ராகுல் காந்தி வந்ததை ஸ்டாலின் கருணாநிதியிடம் தெரிவிப்பது போன்று உள்ளது.
இவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய வண்ணம் இருந்த நிலையில், இப்புகைப்படத்தால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கூட்டு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது வந்த தகவலின் படி கருணாநிதியின் இதயத்துடிப்பு 87 (இயல்பு நிலை 60 – 100) இருப்பதாகவும், இரத்ததில் ஆக்ஸிஜன் அளவு 95 (இயல்பு நிலை 94 – 99) இருப்பதாகவும் 80 வயதிற்கு மேல் இருப்பவர்களில் சுவாசத்தின் அளவு நிமிடத்திற்கு 10-லிருந்து 30 வரை இருக்க வேண்டும் எனவும் கருணாநிதிக்கு 20 இருப்பதால், முன்பு இருந்ததை விட கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.