புத்தாண்டு பலன் – 2019 மகரம்!

0

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே நண்பர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும் சமமாக பழகும் குணமும் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் தாங்கி கொள்ளும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ராசியாதிபதி சனிபகவான் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் ஏழரைசனியில் விரய சனி நடைபெறுகிறது. இதனால் சிறுசிறு இன்னல்களை சந்தித்தாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். வருட கோளான குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் அனுகூலமாக சஞ்சாரம் செய்வதால் தன வரவுகள் தாராளமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவு ஆனாலும் உடனே சரியாகிவிடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவுவதால் நீண்ட நாட்களாக நிலவிய மனக்கவலைகள் விலகும். உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக நல்லதொரு மாற்றங்கள் ஏற்பட்டு ஏற்றமிகு பலனை அடைவீர்கள். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வருவதால் லாபங்களும் சிறப்பாக இருக்கும். 1,7-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும்.

பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றங்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் திறம்பட செயல்பட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல்நிலையில் தேவையற்ற பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய வலிமையையும் வல்லமையையும் பெறுவீர்கள். அடிக்கடி செல்லும் பயணங்களால் உடல் நலம் சோர்வடைந்தாலும் எதிர்பாராத அனுகூலத்தையும் அடைய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பம் பொருளாதாரநிலை
கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் மேன்மையும் ஏற்றமும் உண்டாகும். சுப செலவுகள் அதிகரிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். உங்களது சோர்வுகள் விலகி உற்சாகமாக பணியாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். புதிய பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல மேன்மையும் முன்னேற்றமும் உண்டாகும். கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி அனுகூலமான பலனை பெறுவீர்கள். கூட்டாளிகளும் வேலையாட்களும் ஆதரவாக செயல்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் நல்ல லாபம் அமையும். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன், ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றால் நல்ல லாபம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். பழைய தொகைகளும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்.

அரசியல்
அரசியல்வாதிகளின் பெயர் புகழ் உயரும். உடன் இருப்பவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பாக பணியாற்ற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் மேலும் அனுகூலம் உண்டாகும். மறைமுக வருவாய் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும்.

விவசாயிகள்
விவசாயத்தில் பட்டபாட்டிற்கு ஏற்ற பலனைப் பெற்று விட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும் தகுந்த நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஒரளவுக்கு லாபம் கிட்டும். கால் நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடைய வேண்டிய லாபங்களை அடைந்து விட முடியும்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிறப்பான பொருளாதார முன்னேற்றத்தை அடைவீர்கள். பல வழிகளிலும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதனால் அனுகூலப்பலனும் உண்டாகும். பாடல் மற்றும் இசை துறைகளில் உள்ளவர்களும் அனுகூலம் அடைவார்கள்.

பெண்கள்
எடுக்கும் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தனவரவு சிறப்பாக அமையும். புதிய பொருட்சேர்க்கைகள் கிடைக்கும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். தாய்வழியில் சிறப்பான ஆதரவைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் பிரமாதமான மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளிலும் மாநில அளவில் வெற்றி பெற கூடிய வாய்ப்புகள் அமையும். எடுக்கும் எந்தவொரு முயற்சிகளிலும் வெற்றி பெறுவதால் பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் கிடைக்கும். சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

ஜனவரி
ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வி தரமும் உயர்வடையும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 22-01-2019 இரவு 11.32 மணி முதல் 24-01-2019 இரவு 11.50 மணி வரை.

பிப்ரவரி
ஜென்ம ராசியில் கேது, சூரியன், 12-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குரு 11-ல் இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு உணவு உண்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 19-02-2019 பகல் 11.03 மணி முதல் 21-02-2019 காலை 10.23 மணி வரை.

மார்ச்
ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய் 12ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்– மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்கவிருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைப்படும். மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். 7-ஆம் தேதி முதல் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 18-03-2019 இரவு 09.45 மணி முதல் 20-03-2019 இரவு 09.36 மணி வரை.

ஏப்ரல்
ராசிக்கு 6-ல் ராகு மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.

மே
ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சரிப்பதாலும், 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் கிட்டும். குடும்பத்தில் தேவையயற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை சிறப்பாகவே ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 12-05-2019 பகல் 11.53 மணி முதல் 14-05-2019 பகல் 02.30 மணி வரை.

ஜுன்
ராசிக்கு 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 08-06-2019 மாலை 05.22 மணி முதல் 10-06-2019 இரவு 08.00 மணி வரை.

ஜுலை
ராசிக்கு 6-ல் ராகு 7-ல் புதன் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.

ஆகஸ்ட்
ராசிக்கு 6-ல் ராகு 7-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளுக்கிடையே இருந்த பிரச்சனைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை மற்றும் 29-08-2019 இரவு 08.10 மணி முதல் 31-08-2019 இரவு 07.20 மணி வரை.

செப்டம்பர்
ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் ராகு 11-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.
சந்திராஷ்டமம் – 26-09-2019 காலை 06.40 மணி முதல் 28-09-2019 காலை 06.20 மணி வரை.

அக்டோபர்
இம்மாதம் 6-ல் ராகு, 10-ல் புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 23-10-2019 மாலை 03.15 மணி முதல் 25-10-2019 மாலை 04.20 மணி வரை.

நவம்பர்
மாதகோளான சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 6-ல் ராகு 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். 5-ஆம் தேதி முதல் குரு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் சாதகப்பலன் அமையும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 19-11-2019 இரவு 09.20 மணி முதல் 22-11-2019 அதிகாலை 00.05 மணி வரை.

டிசம்பர்
மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், 10, 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 17-12-2019 அதிகாலை 02.45 மணி முதல் 19-12-2019 அதிகாலை 05.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,7,8
கிழமை – சனி, புதன்
திசை – மேற்கு
நிறம் – நீலம், பச்சை
கல் – நீலக்கல்
தெய்வம் -ஐயப்பன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டு பலன் – 2019 தனுசு!
Next articleபுத்தாண்டு பலன் – 2019 கும்பம்!