பீதியில் மக்கள்! இரவு வேளையில் திடீரென வீட்டுக்குள் புகுந்த பாரிய முதலை!

0

வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் இரவு வேளையில் வீட்டிற்குள் பாரிய முதலை ஒன்று புகுந்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், வனஜீவராசிகள் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருவதற்கு தாமதித்த நிலையில் இன்று காலையே வந்துள்ளனர்.

இதையடுத்து இன்று காலை முதலையை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூந்தோட்டம் – இந்து மயானத்திற்கு அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றிற்குள் நேற்று இரவு 8 மணியளவில் பூந்தோட்டம் குளத்திலிருந்த முதலை ஒன்று உணவு, தண்ணீர் தேடிச் சென்றுள்ளது.

வீட்டு நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் சென்று பார்வையிட்ட போது முதலை நின்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் முதலையை கயிற்றினால் கட்டி வெளியே செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மகாறம்பைக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இரவு பொலிஸார் சென்று பார்வையிட்டுள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இன்று காலை அவ்விடத்திற்குச் சென்று முதலையை அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக குளத்திலுள்ள முதலைகள் உணவிற்கும் தண்ணீருக்கும் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையெடுக்கின்றன.

எனவே இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமலேசிய விமான நிலையத்தில் இலங்கை தமிழருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
Next articleஇலங்கை இளைஞனின் இணையத்தை கலக்கும் அபார திறமை!