மனைவி சந்தியாவைக்கொன்ற பால்கிருஷ்ணனை கைது செய்ய முக்கிய தடயமாக இருந்த டாட்டுவுடன் கூடிய சந்தியாவின் படம் வெளியானது. கூகுள் கிளவுடில் போலீஸார் இதை எடுத்துள்ளனர்.
கடந்த 21-ம் தேதி பெருங்குடி குப்பை மேட்டில் கிடந்த ஒரு கை இரண்டு கால்களை மட்டுமே வைத்துக்கொண்டு போலீஸார் துப்புத்துலக்க முடியாமல் திணறி வந்தனர். அவர்களுக்கு கிடைத்த ஒரே தடயம் உடல் பாகத்தில் வரையப்பட்டிருந்த டாட்டுதான்.
ஆனாலும் அதை வைத்து மட்டுமே ஒருவரை அடையாளம் காண முடியாது. இருந்தாலும் கிடைத்ததை வைத்துத்தான்போராடத்தான் வேண்டும் என போலீஸார் களத்தில் இறங்கினர். இதில் டாட்டு போட்ட பெண்கள் யார் என்று போலீஸார் படத்தை வெளியிட்டு தேடினர்.
சினிமா சம்பந்தப்பட்ட, கிளப்புகளில் பணியாற்றும் பெண்களாக இருக்கலாம் என்கிற ரீதியிலும் தேடி வந்தனர். தூத்துக்குடியில் டாட்டுவை அடையாளம் கண்ட ஒருவர் இது சந்தியா என்கிற பெண்மணி என்று நினைக்கிறேன் என அங்குள்ள ஆய்வாளருக்கு சொன்னதுதான் இந்த கொலை விசாரணையில் முதல் திருப்பம்.
அடுத்து போலீஸார் அதில் பயணம் செய்தபோது சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனிடம் முதல்கட்ட விசாரணை நடத்தியபோது சந்தியா டாட்டுவே போடாதவர் என குழப்பிவிட போலீஸார் முட்டுச்சந்தில் சிக்கிய வாகனம் போல் திகைத்து நின்றுவிட்டனர்.
அடுத்தக்கட்டமாக சந்தியாவின் பெற்றோரிடம் விசாரித்தபோதுதான் சந்தியா டாட்டு போட்டுள்ளார் என்கிற விபரம் தெரிய வந்தது. இதன் பின்னர் போலீஸார் விஞ்ஞான ரீதியாக விசாரணையை அணுகினர். சந்தியாவின் செல்போன் எண் கிடைக்க அதன் மூலம் அவரது மெயில் ஐடியை எடுத்து கூகுள் மூலமவரது செல்போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த படங்களை எடுத்தபோது போலீஸாரின் விசாரணையில் திருப்பு முனையாக, கொல்லப்பட்டு கைகள் குப்பைமேட்டில் வீசப்பட்டது சந்தியாவின் கைகள்தான் என்பதற்கு ஆதாரமான படம் கிடைத்தது.
இதன் பின்னரே விசாரணை வேகம்பெற்று கணவர் பாலகிருஷ்ணனும் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்போது கூகுளில் போலீஸார் எடுத்த டாட்டுவுடன் கூடிய சந்தியாவின் படம் வெளியாகி உள்ளது.