நமது இந்திய கலாச்சாரத்தில் விலங்குகளை பல இடங்களில் மதிக்க வேண்டும் என்றும், அன்பு செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நமது இந்திய கலாச்சாரத்தில் இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டும், நண்பர்களாக திகழ வேண்டும் என்றும் உரைக்கப்பட்டுள்ளது. இவ்வுலகில் உயிர்கள் மத்தியில் சமநிலை இருக்க வேண்டும்.
எந்த ஓர் உயிரினம் இவ்வுலகில் வாழ வேண்டும் என்றாலும், அதற்கு மற்றொரு ஜீவராசியின் துணை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் பல்லிகளும் ஒன்றாகும், இதுக் கொல்லப்படக் கூடாத விலங்காக நம் இந்திய கலாச்சாரத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் பலவகையாக கூறப்படுகிறது…
இந்திய புராணங்கள்
கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது. நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தை பல்லியின் உருவில் தான் வருகை தருகிறார்கள் எனவும், பூஜை அறைகளில் இருந்து முக்கியமான தருணங்களில் நமக்கு நல்லது, கெட்டது வரும் போது எச்சரிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
அடையாளச் செய்தி
நமது சாஸ்திரங்களில் ஒன்றாக கூறப்படுவது தான் பல்லி அல்லது கௌளி சாஸ்திரம். நமது உடல் பாகங்களில் பல்லி விழும் இடத்தை வைத்து நமது நேரத்தை பற்றியும், நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும். இது ஒருவகையான அடையாளச் செய்தியாக அறியப்படுகிறது. இதனாலும் கூட பல்லியை கொல்லக் கூடாது என்று கூறுவது உண்டு.
கடவுளின் செய்தியாளன்
நமது இதிகாசங்களில் பல்லி கடவுளின் தூதர் அல்லது செய்தியாளன் என்று கூறப்பட்டுள்ளது. இது கடவுளிடம் இருந்து நல்லது மற்றும் கெட்டது நடக்கவிருக்கும் செயல்கள் குறித்த செய்திகளை மனிதர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறது என்று கருதப்படுகிறது. கடவுள் மற்றும் மனிதர்களிடையே இது தகவல் தொடர்பு ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை முன்னாளில் இருந்துள்ளது.
கோவில்களில் வணங்கப்படும் பல்லிகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலில் பல்லி வணங்கப்படுகிறது. கடவுளை தரிசித்த பிறகு சுவற்றில் இருக்கும் பல்லி உருவத்தை வணங்குவதால் மங்களகரமான செயல் (அ) நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்திய பாரம்பரியம்
ஆரம்பம் முதலே நமது இந்திய பாரம்பரியத்தில், புராணங்களில் விலங்குகளை கொல்வது தீமை விளைவிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. சுற்று சூழலின் சமநிலை சீர்கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
பல்லியை கொல்லக் கூடாது
நமது பாரம்பரியத்தில் என்ன காரணம் கூறியிருந்தாலும், பல்லிகள் நமது வீடுகளில் அமைதியாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம். இவை வீட்டில் இருக்கும் நச்சுப் பூச்சிகள் கொன்று நமக்கு நல்லதை தான் செய்கின்றன. எனவே, இதிகாச தகவல்கள் (அ) இந்திய பாரம்பரியம் (அ) ஆன்மிகம் என்று பாராமல் ஓர் உயிராக கருதி அதை நாம் கொல்லாமல் இருக்கலாம்.
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!!