திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பெண் ஒருவரின் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 50,000 ரூபாய் பணத்தை திருடிய தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் நேற்று கைது செய்திருந்த கிண்ணியா பொலிஸார், இன்று திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம். அம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டுள்ள தாயாரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், மகனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்லவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதில் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துமுதுகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ரன்விகா லக்மாலி என்ற தாயாரும், 16 வயதுடைய தீக்ஷன கவிந்து என்ற மகனுமே கைது செய்யப்பட்டு இருந்தனர்.
கிண்ணியா தளவைத்தியசாலையில் சுத்திகரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்யும் பெண் ஒருவரின் ஏ.டி.எம் அட்டையை அதே வைத்தியசாலையில் வேலை செய்யும் மற்றுமொரு பெண் திருடியுள்ளார்.
பின்னர் அந்த ஏ.டி.எம் அட்டையைக் கொண்டு வேறு ஒரு வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து 50,000 ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் கிண்ணியா பொலிஸார் குறித்த தாயையும், மகனையும் கைது செய்துள்ளனர்.