தெலுங்கானா மாநிலத்தின் யாதத்ரி போங்கிர் மாவட்டத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு தகவல் வந்ததையடுத்து ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.
கல்யாணி (25) என்ற பெண்ணின் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் அங்கிருந்த இரண்டு சிறுமிகளை மீட்டுள்ளனர்.
பின்னர் கல்யாணி கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அதே பகுதியில் இருந்த மேலும் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் 7 வயது மற்றும் 4 வயது உட்பட மொத்தம் 11 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 5 வீடுகளில் இருந்தும் பாலியல் தொழில் செய்து வந்த அனிதா (30), சுசிலா (60), நர்சிம்மா (23), ஸ்ருதி (25), சரிதா (50), வாணி (28), வம்ஸி (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இடைத்தரகர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை ரூ.2 லட்சம் பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி தனியாக சுற்றித்திரியும் சிறுமிகளை இந்த தொழிலுக்காக பிடித்து வந்துள்ளனர்.
சிறுமிகள், விரைவில் வளர்ச்சியடைந்து பாலியல் தொழிலுக்கு தயார் ஆவதற்காக, உறுப்புகள் வளர்ச்சியடையும் ஊசி போட்டுள்ளனர். ஊசிகளை சுவாமி என்ற மருத்துவர் போட்டுள்ளார். ஒரு சிறுமிக்கு ஒரு ஊசி போடுவதற்கு அவர் கட்டணமாக ரூ.25 ஆயிரம் பெற்றுள்ளார்.
இதுதவிர பாலியல் தொழிலில் ஈடுபட மறுக்கும் சிறுமிகளை அவர்கள் உணவு இன்றி கொடுமை செய்துள்ளனர்.
இந்தக் கும்பலை பிடித்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.