கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க வந்த விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9.50 மணியளவில் Air China CA 424 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கவிருந்தது.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை மேலாளர் தெரிவித்துள்ளார்.
இரவு காணப்பட்ட சீரற்ற காலநிலையினால், கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையில் ஏற்பட்ட தெளிவின்மையே இதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
166 பயணிகளுடன் குறித்த விமான மத்தல விமான நிலையத்தை சென்றடைந்த போதிலும், பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை.
அதிகாலை 1.08 மணியளவில் மீண்டும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.