தாய்லாந்தில் இருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள தங்களது தந்தையைத் தேடி குடியிருப்பைவிட்டு வெளியேறிய இரு சிறார்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் உள்ள அவர்களது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுவிஸ் நாட்டவர் ஒருவர் தமது நான்கு பிள்ளைகளுடன் தாய்லாந்தில் குடியிருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தமது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
மட்டுமின்றி தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, அவர்களை தம்முடன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் தாய்லாந்து நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
ஆனால் அதற்கு அந்த தாயார் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம்,
தங்களது குடியிருப்பின் பால்கனியில் இருந்து அந்த நான்கு பிள்ளைகளும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதில் 5 வயது சிறுவன் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டான். படுகாயமடைந்த எஞ்சிய மூவரும் தீவிர சிகிச்சையில் இருந்து வந்துள்ளனர். அதில் 7 வயது பெண் பிள்ளை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது.
எஞ்சிய இருவரும் காயங்களில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் 11 மற்றும் 12 வயது கொண்ட இரு சிறார்களும் வெள்ளியன்று தாயாரின் குடியிருப்பில் இருந்து தங்கள் தந்தையை காணும் பொருட்டு தப்பியுள்ளனர்.
ஆனால் சுமார் 20 கி.மீ தொலைவில் வைத்து இருவரையும் பொலிசார் மீட்டுள்ளனர். பொலிசாரிடம் தாங்கள் மீண்டும் தாயாருடன் செல்ல விரும்பவில்லை எனவும்,
தங்களை தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மட்டுமின்றி தாயார் தங்களை துன்புறுத்துவதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறார்களின் குற்றச்சாட்டை அந்த தாயார் மறுத்துள்ள நிலையில், பொலிசார் இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் தற்போது வைத்துள்ளனர்.
மேலும், நடந்த சம்பவத்தை சிறுவர்கள் இருவரின் தந்தையிடம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது அவர் தாய்லாந்தில் இல்லை என்பதால் எதிர்வரும் 8 ஆம் திகதி சிறார்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.