சீனாவில் விளையாடிக் கொண்டிருந்த 14 குழந்தைகளைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய லியூ என்ற பெண்ணை, காவல்துறை கைது செய்துள்ளது.
சோங்கிங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 39 வயது லியூ உள்ளே நுழைந்தார். அரசுக்கு எதிராக அதிருப்தியில் அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளே வந்தவர் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியால் 14 குழந்தைகளைக் காயப்படுத்தினார்.
இதையடுத்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த பெற்றோர்கள் அவரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காயமடைந்த குழந்தைகளில் இருவர் இறந்ததாக வெளியான செய்திகளைக் காவல்துறை மறுத்துள்ளது. வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் சம்பந்தமே இல்லாத வகையில் தனிநபருக்கும், அரசுக்கும் எதிரான சிலரால் பள்ளிகளிலும், மழலையர் பள்ளிகளிலும் கத்திக் குத்துகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.