சிறிய பிரச்சினைகளும்! முதலுதவியும்!

0

பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுகிற சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
காது வலி:

குழந்தைகளுக்குக் காய்ச்சல், தடுமம் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமாகத் தொல்லை தருவது, காதுவலி. பல சமயங்களில் காதுவலி தானாகவே சரியாகிவிடும். சிலருக்குக் காதில் சீழ் வடிதல், காது கேளாமை போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

காரணங்கள்:

தடுமம், சளி பிடிக்கும் போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கி விடும். அப்போது தொண்டையிலிருந்து காதுக்குச் செல்லும் ‘ஈஸ்டாக் கியன்’ குழாய் அடைபட்டுவிடும். இதன் விளைவாக காதில் காற்றழுத்தம் வேறுபடும். இதை ஈடுசெய்ய காது சவ்வு உள்நோக்கி நகரும். இதனால் காது வலிக்கும்.

என்ன முதலுதவி?

* தடுமத்தைக் குறைக்கிற மாத்திரைகள் சாப்பிடலாம்.

* மூக்கு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மூக்கடைப்பை நீக்கும் சொட்டு மருந்தை மூக்கில் ஊற்றலாம்.

* ‘டிங்சர் பென்சாயின் ’ மருந்தைப் பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம்.

* வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

* ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

* காது வலி போக்கும் சொட்டு மருந்து ஊற்றலாம்.

* காதில் சீழ் வடிந்தால் அல்லது காது சவ்வில் துவாரம் விழுந்திருந்தால், காதில் சொட்டு மருந்து ஊற்றக்கூடாது.

காதில் அந்நியப் பொருள்கள்:

காதில் குரும்பி சேர்ந்து காது வெளிக் குழலை அடைத்துவிடும். சமயங்களில் அந்தக் குரும்பியில் தண்ணீர் பட்டதும் அதை உறிஞ்சிப் புடைத்துவிடும். அப்போது காது வலிக்கும்.

இதுபோல், குழந்தைகள் விளையாட்டுத்தனமாக காதில் பலப்பம், மரக்குச்சி, ரப்பர், வேப்பமுத்து போன்றவற்றைப் போட்டுக்கொள்வார்கள். இவையும் காது சவ்வை அழுத்தி வலி ஏற்படுத்தும். காதில் பூச்சி நுழைந்து விட்டாலும் காது வலிக்கும்.

என்ன செய்யலாம்?

* காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம்.

* குரும்பியை வெளியில் எடுப்பதற்குக் குச்சி, ஊக்கு, பட்ஸ் போன்றவற்றால் எடுக்க முயற்சி செய்வது தவறு. அப்படிச் செய்தால் காதில் உள்ள பொருள் இன்னும் உள்ளே போய்விடும்.

* குரும்பி மற்றும் பிற அந்நியப் பொருள்கள் காதில் இருந்தால், மருத்துவரிடம் காண்பித்து உரிய கருவி மூலம் வெளியில் எடுப்பதே நல்லது.

* காதில் பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில் ஊற்றலாம். பூச்சி எண்ணெயில் இறந்துவிடும். பிறகு சிறிதளவு தண்ணீரைக் காதில் ஊற்றித் தலையைச் சாய்த்தால், பூச்சி வெளியில் வந்துவிடும்.

* காய்ச்சிய எண்ணெயைக் காதில் ஊற்றக் கூடாது.

கண்ணில் அந்நியப் பொருள்கள்:
தூசு, பூச்சி, உலோகத்துகள்கள் போன்றவை கண்ணில் விழுந்துவிடும். இதனால் கண் வலிக்கும். கண் கூசும். எரியும். கண்ணைத் திறக்கமுடியாத நிலைமையும் ஏற்படுவதுண்டு.

முதலுதவி என்ன?

* பாதிக்கப்பட்ட நபரை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் உட்காரச் சொல்லுங்கள்.

* கண்ணில் புகுந்த பொருள் தென்படுகிறதா என்று பார்க்கவும். கீழ் இமையைக் கீழே நோக்கி இழுங்கள். அவரை மேலே பார்க்கச் சொல்லுங்கள்.

* அடுத்து, மேல் இமையை மேல் நோக்கி இழுங்கள். அவரைக் கீழே பார்க்கச் சொல்லுங்கள்.

* கண்ணுக்குள் பொருள் இருப்பது தெரிந்தால், அந்த நபரை அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் கண்களை முக்கி, கண்களைத் திறந்து மூடச் சொல்லுங்கள்.

* பாத்திரம் இல்லையென்றால், இப்படியும் செய்யலாம். இமைகளை விலக்கிக்கொண்டு, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம்.

* இதன் மூலம் மேலோட்டமாக உள்ள வெளிப்பொருள்கள் எளிதில் வெளிவந்துவிடும்.

* விழியில் புகுந்துவிட்ட பொருள்கள் வெளியில் வராது. அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

* இதுபோல் கருவிழியில் உள்ள பொருள்களைத் துவாலையால் துடைத்து எடுக்க முயற்சி செய்யக்கூடாது.

* கண்ணைக் கசக்கக்கூடாது.

மூக்கில் அந்நியப் பொருள்கள்:

குழந்தைகள் மூக்கிலும் சில பொருள்களைப் போட்டுக்கொள்வார்கள். முக்கியமாக சிலேட்டுக்குச்சி, பொத்தான், பயறு, பஞ்சு, பேப்பர், பருத்திக்கொட்டை போன்றவற்றைச் சொல்லலாம்.

என்ன முதலுதவி?

* கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் மூக்கை வலுவாகச் சீந்தச் சொல்லுங்கள். அப்பொருள் வெளியில் வந்துவிடும்.

* சிறிய கிடுக்கி கொண்டும் வெளியில் எடுக்கலாம்.

* முயற்சி தோல்வியடைந்தால், மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

* அந்நியப்பொருள் வெளியேறும் வரை வாய் வழியாக சுவாசிப்பதே நல்லது. மூச்சை உள்ளிழுத்தால் அந்தப் பொருள் இன்னும் உள்ளே சென்றுவிடும்.

தோலில் அந்நியப் பொருள்கள்:

கல், குச்சி, முள், பீங்கான் போன்றவை பாதத்தில் குத்திவிடும். அப்போது என்ன செய்வது?

* சோப் தண்ணீர் விட்டு அந்த இடத்தைக் கழுவுங்கள்.

* நெருப்பில் காட்டப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை மெலிதாகத் தோலில் செருகி, குத்தியுள்ள பொருளை மேல்நோக்கி அகற்றுங்கள்.

* முயற்சி தோல்வியடைந்தால், மருத்துவர் உதவி பெற வேண்டியது அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்க்கரை நோய்க்கு மிக முக்கியமான மருந்தாக திகழும் அற்புத மருத்துவம் கோவைக்காய்!
Next articleதினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன்!