குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்

0

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு மந்தநிலை உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். சனி பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. இதுவும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் கணவன்- மனைவியிடையே சண்டை சச்சரவுகள் உண்டாகும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் 2-ஆம் வீட்டில் கேதுவும் 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும்.

குருபார்வை 5, 7, 9-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். செய்யும் தொழிலில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தாமதமாகவே கிடைக்கும். கூட்டாளிகளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அபிவருத்தியை பெருக்கி கொள்ள முடியும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றங்களைப் பெறக் சுடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலையே உண்டாகும். என்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு, ஞாபகமறதி, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவை உண்டாகும். பெரியோர்களின் சாபத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை ஏற்படும். ஏழை பிராமணார்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சிறப்பாக தான் இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் நிறைய தடைகளுக்கு பின்பு தான் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்வீர்கள். புத்திரர்களாலும் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். நினைத்த காரியங்கள் நிறைவேற்றி கொள்ள எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலமானப் பலனை பெற முடியும்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தினால் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதாலேயே பல பேரின் விரோதத்தை சம்பாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகளும் வெளி வட்டாரத் நட்புகளும் ஓரளவுக்கு நன்மையளிக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் நன்மை தீமை கலந்த பலன்களை அடைவீர்கள். நிறைய போட்டிகள் ஏற்பட்டு புதிய வாய்ப்புகள் கை நழுவி சென்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் சில நேரங்களில் அலைச்சல்களை ஏற்படுத்த கூடும் என்பதால் எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்றே தாமதப்படும். வரவேண்டிய பணத்தொகைகளும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் தாமதத்தை ஏற்படுத்தும்.

உத்தியோகம்
பணியில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். என்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைத்தாலும் ஊதிய உயர்வுகள் தாமதமாகும்.

அரசியல்
மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் சில பிரச்சினைகளை சந்திக்க கூடும் என்பதால் இருக்கும் சொத்துக்களுக்கு சரியான ஆவணங்களை வைத்திருப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

விவசாயிகள்
புழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் லாபம் குறைவாக இருக்கும். அரசு வழியில் எந்தவித உதவியையும் எதிர்பார்க்க முடியாது. பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெற முடியாததால் மனநிம்மதி குறையும். பொருளாதார நிலையும் நெருக்கடியாக இருக்கும். வேலை ஆட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் என்றாலும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதமாகவே வரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலைகள் உண்டாகும். சுக வாழ்வு பாதிப்படையும் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களின் எல்லா துன்பங்களையும் மறைய செய்யும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு கோளாறு, மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்ற கூடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். சிலருக்கு புத்திர பாக்கியங்கள் தாமதப்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பண விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதோ பிறரிடம் எந்த பொருளையும் இரவல் வாங்குவதோ கூடாது. பணிபுரியும் பெண்கள் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

மாணவ மாணவியர்
கல்வியில் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். படித்ததெல்லாம் மறந்து போகும் அளவிற்கு ஞாபக மறதி உண்டாகும். கல்லூரிகளில் பயிலுபவர்கள் மனது அலைபாய கூடிய சூழநிலை ஏற்படும். மனதை போகின்ற போக்கில் விடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது கல்வியின் முன்னேற்றத்திற்கு நல்லது. உடன் பயிலுபவர்கள் சாதகமாக இருப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெறமுடியும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் பாத சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கை கால் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி ஆதாயங்கள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும்.

கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சுமாரானநிலை இருக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதும். 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். கேது 3-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும்.

ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் 8,11- க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு மந்தநிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும்.

வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தின் மூலம் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக முயற்சித்தால் மட்டுமே நற்பலன் கிட்டும். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
குருபகவான் இக்காலங்களில் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வதால் அனுகூலமான பலன்களை பெற முடியும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் சற்றே குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். சனி, கேது 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.

பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் லாபங்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் உயர் கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும். சனிபகவானை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு, மந்த நிலை படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படும்.

அசையும் அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப் பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனி யந்திரம் வைத்து வழிபடுவது வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 13-2-2019 முதல் சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிக்க இருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சர்பசாந்தி செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை – செவ்வாய், வியாழன்
கல் – பவளம், திசை – தெற்கு தெய்வம் – முருகன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களை ஐரோப்பாவுக்குள் கடத்திச் சென்ற இலங்கையர் யார்? அம்பலமான தகவல்!
Next articleயாழ். பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவைகள்!