குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 மகரம்.

0

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அனைவரிடமும் அன்பாக பழகும் ஆற்றலும், உதவிகள் செய்யும் நல்ல குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப் படக்கூடிய குருபகவான் இதுநாள் வரை 10-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்து இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) உங்களின் ஜென்ம ராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த காலங்களிலிருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாக கூடிய பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும்.

உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதிகளை செய்யமாட்டார். இதுவரை 1, 7-ல் சஞ்சரித்த ராகு கேது வரும் 13-2-2019 முதல் மாறுதலாகி ராகு 6-ஆம் வீட்டிலும் கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் அலைச்சல்கள் டென்ஷன்களும் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அபிவிருத்தியும் பெருகும். பயணங்களாலும் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு கிட்டும். குருபார்வை 3, 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து உறவு கொண்டாடுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரள நிலை ஏற்படும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகாது. உங்களுக்கு உள்ள அலைச்சல் டென்ஷன் யாவும் குறைந்து மனநிம்மதியான சூழ்நிலைகள் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை
இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகி ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகிய உறவினர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலையானது உயர்ந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். வீடு மனை வண்டி, வாகனங்கள் வாங்க விரும்புபவர்களின் எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி கைகூடும்.

கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் லாபம் காணக் கூடிய காலமிது. தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கல் நல்ல முறையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி திரும்ப கிடைக்கும். அசையா சொத்து வகையில் இருந்த பிரச்சினைகள், தேவையற்ற வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். லாபம் பெருகும்.

தொழில் வியாபாரம்
நிறைய போட்டிகளையும் வேதனைகளையும் சந்தித்திருந்தாலும் தற்போது உங்களின் தொழில் வியாபார வளர்ச்சியானது மிகுந்த லாபத்தையும் அபிவிருத்தியையும் பெருக்குவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவு படுத்த அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். தொழிலாளர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தை பல இடங்களில் விரிவு படுத்த நீங்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்
பணியில் நீங்கள் சந்தித்து வந்த சோதனைகள் வீண் பழிச்சொற்கள் யாவும் விலகி எதிர்பாராத உயர்வினை உண்டாக்கும். மற்றவரை அதிகாரம் செய்ய கூடிய அமைப்பு, பலரை வழிநடத்தி செல்லக்கூடிய பதவிகள் யாவும் தேடிவரும். பதவி உயர்வுகள் உண்டாவதால் அதனுடைய ஊதிய உயர்வும் உண்டாகி பொருளாதார நிலையினை உயர்த்தும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும்.

அரசியல்
மக்களுடைய ஆதரவுகளை பெற்று உயர்வடையக்கூடிய பொற்காலமிது. மாண்புமிகு பதவிகள் தேடி வரும் மக்களின் தேவையறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதியாக செயல்படுவீர்கள். கட்சி பணிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். செல்வாக்கு உயரும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய பல யுக்திகளைக் கையாண்டு லாபத்தினைப் பெறுவீர்கள். எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதனையாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். லாபங்கள் பெருகுவதால் புதிய பூமி, நிலம், நவீன கருவிகள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். அரசு வழியிலும் மானிய உதவிகள் கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும்.

கலைஞர்கள்
நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்க கூடிய மகிழ்ச்சியான வாய்ப்பு அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது. அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பு உண்டாகும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவீர்கள்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை அமையும். திருமணமானவர்களுக்கு கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர பாக்கியமும் அமைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து பொருளாதார நிலையும் உயரும். பொன் பொருள் ஆடை ஆபரணமும் சேரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றமடைய கூடிய காலமிது. முயற்சி செய்வதால் முடியாதது ஒன்றுமில்லை என்ற அளவிற்கு தேர்ச்சிகளை பெறுவீர்கள். பள்ளி கல்லூரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஊக்க மருந்தாக அமையும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும்.

பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சனி 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சனைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
குருபகவான் லாப ஸ்தானமான 11-ல் உங்கள் ராசியாதிபதி சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். 12-ல் சனி, 1, 7-ல் கேது ராகு சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகளை உண்டாக்கும் என்றாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும்.

பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் சாதகப்பலன் கிட்டும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களையும் எடுப்பீர்கள். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் ஜென்ம ராசிக்கு 11-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 12-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகத்தில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
குருபகவான் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக 12-ஆம் வீடான தனுசு ராசியில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் நிலவும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும்.

வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை ஓரளவுக்கு அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 12-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும்.

கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
குருபகவான் ஜென்ம ராசிக்கு 11-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள்.

வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது. அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள்எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
13-2-2019 வரை ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது சரபேஸ்வரரை வழிபடுவது, துர்கையம்மனை வழிபடுவதும் உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8 நிறம் – நீலம், பச்சை கிழமை – சனி, புதன்
கல் – நீலக்கல் திசை – மேற்கு தெய்வம் – விநாயகர்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – தனுசு
Next articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கும்பம்