குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கும்பம்

0

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று கடமையே கன்னியமாய் செயலாற்றும் பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்கள, உங்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்து பல நற்பலன்களை ஏற்படுத்திய குரு பகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில், உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் ராசியாதிபதி சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியையும், லாபத்தையும் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக உண்டாவதால் குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. வரும் 13-02-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தின் மூலம் ராகு 5-ஆம் வீட்டிலும் கேது லாபஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளார். இதுமட்டுமின்றி குரு பார்வை 2, 4, 6-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் கூட தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த குரு பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும் என்றாலும் சனி, கேது சாதகமாக சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் திறம்பட எதிர் கொண்டு லாபங்களை பெற முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். ஏதாவது சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் ஒரு சில மருத்துவ செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்த கூடும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயங்களில் சற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்கலாம்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். புத்திரர்களால் சில நேரங்களில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகவே இருப்பார்கள். பண வரவுகளும் தாராளமாகத்தான் இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்வதை சற்று குறைத்து கொள்வது நல்லது. வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். அசையா சொத்து வகைகளில் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஓரளவுக்கு சேமிக்க முடியும்.

கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் ஷேர் போன்றவற்றில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை மற்றும் தேவையற்ற விரோதங்களை சம்பாதிப்பீர்கள். சனியின் சாதக சஞ்சாரத்தால் எந்த வித நெருக்கடிகளையும் சமாளித்து எற்றங்களை அடைவீர்கள். உழைப்பிற்கான பலனை அடைவீர்கள்.

தொழில் வியாபாரம்
நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய காலமிது. எடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வேலையாட்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளும் பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

உத்தியோகம்
பணியில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. எவ்வளவு தான் பாடுபட்டாலும் திறமைக்கு ஏற்ற உயர்வினை அடைய முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டி வரும். சில நேரங்களில் வீண் பழிகளை சுமக்க வேண்டி வரலாம். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று கூற முடியாது. சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் டென்ஷன், குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் உண்டாக கூடும். உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.

அரசியல்
மக்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதாக இருந்தாலும் நல்ல பதவி அடைவதற்கு அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கி கொள்வீர்கள். பத்திரிக்கை நண்பர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப் பிடிப்பதும் இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்வதும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். விளைப்பொருளுக்கு ஏற்ற விலையை சந்தையில் எதிர்பார்க்க முடியாது. அரசு வழியில் சிறுசிறு மானியத் தொகைகள் கிடைக்கும். பங்காளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத தனவரவுகளும் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் சில காரணங்களால் கைமாறிப் போகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை போராட்டத்தில் ஆடம்பரமான செலவுகளை செய்ய முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். கையில் இருக்கும் வாய்ப்புக்களையாவது நழுவ விடாமல் காப்பாற்றி கொள்வதும், கௌரவம் பாராமல் எல்லோரிடமும் சகஜமாக பழகுவதும் நல்லது.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூட சில தடை தாமதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. புத்திர வழியில் ஒரு சில மன சஞ்சலங்களும் வீண் விரயங்களும் உண்டாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைபளு அதிகரிக்கும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானம் தேவை.

மாணவ மாணவியர்
படிப்பில் சற்றே நாட்டம் குறைய கூடிய காலம் என்பதால் முழு முயற்சியுடன் கல்வியில் ஈடுபாடு காட்டுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அமைந்து மேலும் மேலும் உங்களின் பொது அறிவினை வளர்த்துக் கொள்ள உதவும். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி கிட்டும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும்.

பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். குருபகவானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
ஜென்ம ராசிக்கு 10-ல் குருபகவான் உங்கள் ராசியாதிபதி சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் சற்று தாமதங்களுக்குப் பிறகு கிடைக்கும். 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் மேன்மையும், உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும்.

பொன் பொருளை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் ஜென்ம ராசிக்கு 5-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்க சற்று தடைகள் ஏற்படும் என்றாலும் 11-ல் சனி சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பணவரவுகள் ஏற்ற இறக்மாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
இக்காலங்களில் குருபகவான் கேதுவின் நட்சத்திரத்தில் தன் சொந்த வீடான தனுசில் அதிசாரமாக 11-ஆம் வீட்டில் சனி, கேது சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும்.

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வேலைபளு குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். சனி, கேது 11-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும்.

கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
குருபகவான் ஜென்ம ராசிக்கு 5-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறு சிறு தடைகளுக்கு பின் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று போட்டிகள் நிலவினாலும் முன்னேற்றமான நிலை இருக்கும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பதால் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சனி, கேது 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும் என்றாலும் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை ஏற்படும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும். கேது 12-ல் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். 13-02-2019 முதல் ராகு 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் துர்கையம்மனை வழிபடுவது சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8 கிழமை – வெள்ளி, சனி திசை – மேற்கு
கல் – நீலக்கல் நிறம் – வெள்ளை, நீலம் தெய்வம் – ஐயப்பன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 மகரம்.
Next articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மீனம்