கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 32 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் இன்று மதியம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி காவல்துறை பிரிவு பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவையிடம் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், குறித்த சந்தேகத்துக்குரியவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கிளிநொச்சி வயல் பகு தியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கருப்பையா நித்தியகலாவின் மரண பரிசோதனை அறிக்கை வைத்தியர்களால் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கயிறு அல்லது மின் கம்பியினால் கழுத்து நெறிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதராகங்கள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்து பகுதியில் கருப்பு நிறத்தில் நீண்ட கோடு காணப்படு வதாகவும், குறித்த கோடு செல்லும் பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நித்தியகலா உயிருக்கு போராடி உயிரிழந்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நித்தியகலா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படவில்லை எனவும், அவர் ஐந்து மாத கர்பிணியாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைகள் மற்றும் கால்களின் கருப்பு நிறத்தில் அடையாளங்கள் காணப்படுவதாகவும் குறித்த அடையாளங்களுக்கு அமைய அவர் சித்திர வதை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நித்தியகலாவின் கால் கொலுசு பாதணி மற்றும் திறப்புகள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த வேளையில் அவரை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சுற்றி வளைத்து கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி தொழிலுக்கு சென்று மாலை 5.30 இற்கு தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பிய பின்னரே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அத்துடன் நித்தியகலாவின் கை பை ஒன்று அம்பாள்குளம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த பைக்குள் தொழில் புரியும் நிறுவனத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையும் காணப்பட்டுள்ளது.
எனினும் சடலம் கடந்த 29 ஆம் திகதியே மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நித்தியகலா திருமணம் முடித்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு ஐந்து வயது பிள்ளை ஒன்றும் காணப்படுவதாகவும் குறித்த பிள்ளை விசேட தேவையுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நித்தியகலாவின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.