கடிதம் எழுதி விலகிய இரா.சம்பந்தன்! நான் தமிழரசுக்கட்சி இல்லை!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இன்றைய எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், இன்றும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்.

தமிழரசுக்கட்சி ஆயுதம் தூக்காத அக்மார்க் கட்சி, ஜனநாயக வழி போராட்டங்களின் வழிவந்தது, ஜனநாயக போராட்டம்தான்- அகிம்சை வழியிலான பாதைதான் எமது வரலாறு என்றும் அந்த கட்சியினர் இன்றும் கூறிக் கொள்கிறார்கள்.

அவர்களின் இந்த நம்பிக்கைகள், அபிப்பிராயங்களில் இடியை வீழ்த்தும் வரலாறு ஒன்று இருக்கிறது.

இன்று வரலாற்றை அறிந்தவர்களும் இல்லை, அதை தேவைப்படுபவர்களும் இல்லையென்ற அரசியல் வெறுமையேற்பட்டுள்ள நிலைமையில்- பேஸ்புக்கில் அரசியல் பயில்பவர்களால் அரசியல் நிறைந்துள்ள நிலையில், நாம் சொல்லப் போகும் வரலாறு பலருக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

1961ஆம் ஆண்டு மிகப்பெரிய சத்தியாகிரக போராட்டமொன்றை தமிழசுக்கட்சி நடத்தியது.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு,மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட கச்சேரிகளை தமிழரசுக்கட்சி தொண்டர்களும், தலைவர்களும் முற்றுகையிட்டனர்.

பெரும் நிர்வாக முடக்கல் போராட்டம். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்று, இரண்டு பேர்தான் இன்றும் உயிருடன் உள்ளார்கள்.

ஆவண தொகுப்பொன்றிற்காக அண்மையில் அவர்களை நேரில் சந்தித்தபோது, அவர்களிடமிருந்து பெற்ற தகவல்களே இவை.

தமிழ் ஜனநாயக போராட்ட வரலாற்றின் ஆரம்ப நாட்களில் நடந்த அந்த போராட்டத்திற்கு வரலாற்றில் தனி இடம் உள்ளது.

அன்றைய போராட்டத்தால் நிலைகுலைந்த சிறிமாவே அரசாங்கம், சத்தியாகிரகிகள் மீது பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, போராட்டத்தை ஒடுக்கியது.

சத்தியாகிரக போராட்டத்தை தலைமையேற்று நடத்திய தமிழரசுக்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, பனகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அப்போது பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டது தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதித் தருபவர்களையும், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் அல்ல என்று கடிதம் எழுதித் தருபவர்களையும் மட்டும் விடுதலை செய்யுங்கள் என.

சிறைச்சாலை அதிகாரிகள் அதை சிறையிலிருந்த தமிழரசுக்கட்சியினரிடம் சொன்னார்கள்.

சிறிமாவோவின் நிபந்தனையை ஏற்று விடுதலையானவர்கள் இருவர். ஒருவர் கல்முனையை சேர்ந்த எம்.சி.அஹமட். எம்.பியாகவும் இருந்தவர். மற்றையவர் இரா.சம்பந்தன்!

இன்று கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தன், அன்று விடுதலையானது எப்படியென்பதை அவர் இதுவரை எங்கும் பதிவுசெய்யவில்லை.

ஆனால், மேற்படி இரண்டில் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்காமல் விடுதலையாகியிருக்க வாய்ப்பேயில்லை.

எம்.சி.அஹமட், தமிழரசுக்கட்சி உறுப்பினர் அல்ல என கடிதம் எழுதி கொடுத்து விட்டு விடுதலையானதாக பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.

அன்று சிறையிலிருந்தவர்கள் தந்தை செல்வா, அமிர்தலிங்கம், திருச்செல்வம், தருமலிங்கம், சேர்.கந்தையா வைத்தியநாதன் போன்றவர்கள்.

இதில் சேர்.கந்தையா வைத்தியநாதன் தமிழரசுக்கட்சி உறுப்பினரே அல்ல.

ஆனால், தமிழர்களின் உரிமைக்கான சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு விட்டு, மன்னிப்பு கடிதம் எழுதக்கூடாது என்பதற்காக அவர் தொடர்ந்தும் சிறையிலிருந்தார்.

பின்னர் எல்லோரும் விடுதலையானார்கள்.

அதற்கு பின்னர் இன்னொரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

1963இல் திருகோணமலை எம்.பியாக இருந்த இராஜவரோதயம் மரணமடைந்தார். அதற்காக உடனடியாக தேர்தல் வந்தது. வேட்பாளரை கண்டுபிடிக்க வேண்டும்.

செல்வநாயகத்திற்கு திருகோணமலையில் ஒரு நண்பர் இருந்தார். வைத்தியர். அவரது வீட்டில் தங்கியிருந்து வேட்பாளர்களை தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது இரா.சம்பந்தனும் ஒருநாள் வந்து சந்தித்தார். சுமார் அரை மணித்தியாலம் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றார். அவர் போனதும், தனது நண்பரான வைத்தியரிடம், செல்வநாயகம் சொன்னது- i’ll never trust that man!

பின்னர், எஸ்.எம்.மாணிக்கராஜா திருகோணமலையில் தமிழரசுக்கட்சி வேட்பாளராக களமிறக்கப்பட்டார்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிர்ச்சி கொடுத்த திருடர்கள்! ஹிருணிக்கா எம்.பி வீட்டிற்குள்!
Next articleஜனாதிபதி மைத்திரி ஐ,நா சபையில் விடுத்த கோரிக்கை!