கடகம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !

0

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

உயர்ந்த லட்சியங்களை கொண்டவராகவும், விடா முயற்சியுடன் செயல்படுவராகவும் விளங்கும் கடக ராசி நேயர்களே! உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் போன்ற அனைத்தையும் உயர்த்தும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனியும், கேதுவும் சஞ்சரிப்பதாலும், பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சாரம் செய்வதாலும் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடையும்.

உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சொந்த பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். திருக்கணிதப்படி குரு வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று ஏற்ற இறக்கமான நிலை ஏற்படும் என்றாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் எல்லா காரியங்களில் வெற்றிகளைப் பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் விண் செலவுகளின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதிநவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும்.

உத்தியோகம்
பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும். குருபெயர்ச்சிக்குப் பின் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

அரசியல்
உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடுவதால் சற்றே அலைச்சல் உண்டாகும். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கு ஏற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. கால்நடைகளால் லாபம் கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் கிட்டும்.

மாணவ- மாணவிகள்
கல்வியில் முதன்மை பெற்று விளங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

மாதப்பலன்

சித்திரை
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொட்டதெல்லாம் துலங்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் இனிமையானப் பலன்களைப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

வைகாசி
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலப்பலன் ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறைவதோடு குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

ஆனி
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது இருப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை குறைக்கலாம். முருகப் பெருமானையும் சிவனையும் வழிபடுவது நல்லது.

ஆடி
ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயர்வடைவதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிலருக்கு பயணங்கள் மேற்கொள்ளும் யோகமும், பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். சிவ பெருமானை வழிபடவும்.

ஆவணி
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை தரும். சூரியன், செவ்வாய் 2-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிட்டும். பணவிஷயங்களில் இருந்த நெருக்கடிகள் யாவும் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

புரட்டாசி
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் இருந்தப் பிரச்சினைகள் விலகி கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை பளு குறையும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்தியாகும். முருக பெருமானை வழிபடுவது நல்லது.

ஐப்பசி
செவ்வாய் 3-லும், சனி, கேது 6-லும் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எந்த வித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் நல்ல மேன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 19-ஆம் தேதி முதல் குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிவ வழிபாடு செய்யவும்.

கார்த்திகை
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்களை அடைவீர்கள். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் சற்றே விலகும். எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். பண வரவுகளில் ஏற்றத் தாழ்வான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். முருக வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி
உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது, சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நிலைமையை சமாளித்து விட முடியும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களின் ஆதரவு ஒரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதவீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்றே தேக்க நிலை ஏற்பட்டாலும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அம்மன் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

தை
கேது 6-ல் இருப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் உண்டாகும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

மாசி
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் ஏற்றங்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினை பெற முடியும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது சிறப்பு. விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி
கேது 6-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நற்பலன்களை உங்களுக்கு தரும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, முன் கோபத்தை குறைப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9,
நிறம் – வெள்ளை, சிவப்பு
கிழமை – திங்கள், வியாழன்
கல் – முத்து
திசை – வடகிழக்கு
தெய்வம்- வெங்கடாசலபதி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளிநாட்டில் நடுவர்களை திணற வைத்த தமிழ் சிறுவன்! குவியும் வாழ்த்துக்கள்! வைரலாகும் காட்சி!
Next articleசிம்மம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !