வீட்டுச் சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்களில் ஒன்று தான் சீரகம். இந்த சீரகத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சீரகத்தில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.
மேலும் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்திலும் சீரகம் பல பிரச்சனைகளைப் போக்க முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அத்தகைய சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தொடர்ச்சியாக அந்நீரை ஒரு மாதம் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கல்
சீரகத்தில் நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், சீரக நீரை எப்போதும் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
இரத்த சோகை
இரத்த சோகை இருப்பவர்களுக்கும் சீரகத் தண்ணீர் நல்லது. இதற்கு சீரகத்தில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை உடலில் அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கும்.
சளி பிரச்சனை இருந்தால்,
அப்போது வெறும் சுடுநீரைக் குடிக்காமல், நீரில் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், சுவாசக் குழாயில் உள்ள நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு, சளி, இருமலில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
ஞாபக சக்தி
சீரகத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இதனை அன்றாடம் உணவில் சேர்த்தால், ஞாபக சக்தி ஊக்குவிக்கப்படும்.
நோயெதிர்ப்பு மண்டலம்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், வெறும் நீரைக் குடிக்காமல், சீரக நீரைத் தொடர்ச்சியாக குடித்து வாருங்கள். இதனால் உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.