ஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் – காண்ட விவரங்கள் நாடி சோதிடம்
ஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் பதினெட்டு பகுதிகளைக்கொண்ட பதினெட்டு காண்டங்களைக் கொண்டதாகும். அது மட்டுமல்லாமல் சிறப்புக்காண்டமாக பிரசன்ன பிரச்சனை காண்டமும் உண்டு. நாம் இப்பொழுது காண்ட விவரங்களைக்காண்போம்.
1.பொதுக்காண்டம் (உதய காண்டம்)
ஒரு மனிதரின் பெருவிரல் ரேகையைக்கொண்டு அல்லது பிறப்பு விவரங்களைக்கொண்டு கீர்த்தி, புகழ், கௌரவம், வசதிகள், பல்வேறுவிதமான யோகங்கள் மற்றும் தெய்வீக வழிபாடுகள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய பொதுப்பலன்களை சுருக்கமாகச்சொல்லும் குருநூல் பொதுக்காண்டமாகும். பிறகாண்ட பலன்களை அறிந்து கொள்ள இந்த காண்டத்தை கட்டாயம் பார்த்து பலன்களை அறிந்து கொள்ள வேண்டும்.
2.கல்வி மற்றும் குடும்ப காண்டம்
கல்வி நிலை, குடும்ப நிலை, வருமான வாய்ப்புகள், வாக்கு, செல்வம், தானம், கண், பல் மற்றும் ஆபரணச்சேர்க்கை முதலிய அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
3. சகோதர காண்டம்
வெற்றிகள், அக்கம்பக்கத்தவர்கள், சகோதரர் மற்றும் சகோதரிகள், அவர்களால் சாதகர் அடையும் நன்மை தீமைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
4. தாய்வழி சுகக்காண்டம்
தாயார், மனை, நிலம், சொத்து, சுகம், வாகனயோகம், எந்திர யோகம், புதையல், மகிழ்ச்சி, ஆபரணச்சேர்க்கை மற்றும் தெய்வீகச்சுகங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
5. புத்திரக்காண்டம்
குழந்தைகள், பூர்வ புண்ணியம், ராஜயோகம், தாய் மாமன் மற்றும் தர்மகர்ம சிந்தனைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.
6. சத்துரு காண்டம்
விரோதி, வியாதி, கடன், வழக்கு, பிரச்சனைகள், மனக்கலக்கம், சிறைதண்டனை, களவு, குற்றம், பொறாமை மற்றும் விபத்து போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
7. திருமண காண்டம்
திருமணவாழ்வு, எதிர்கால வாழ்க்கைத்துணைவரின் வரலாறு, வாழ்க்கைத்துணைவரின் பலன்கள் மற்றும் நட்பு போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
8. ஆயுள் காண்டம்
ஆயுள் காலம், கண்டம், விபத்து, மற்றும் மரணத்தின் தன்மைகள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.
9. பிதாபாக்கியக்காண்டம்
தந்தை, செல்வம், பணச்சேர்க்கை, பரிசு, தெய்வ தரிசனம், ஆலயம் கட்டுதல், குரு உபதேசம், முக்தி மார்க்கம், தெய்வீக மந்திரம், தெய்வீகப்பொருள், தர்மம், அறப்பணி, யாகம், ஓமம், தந்தைவழி மூதாதையர் சொத்துக்கள் மற்றும் திடீர் பொருள் வரவு போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
10. தொழிற்காண்டம்
தொழில், தொழில் வாய்ப்பு, வியாபாரம், தொழிலுயர்வு, நீண்ட பொருள் வரவு, கர்மம், சமூக சேவைகள் மற்றும் பொது வாழ்வு போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.
11. லாப காண்டம்
லாபம், இளைய களத்திரம் (இரண்டாம் திருமணம்), தகாத உடலுறவு இன்பங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச் சொல்லும் குருநூல்.
12. விரைய காண்டம்
விரையம், அடுத்த பிறவி, மோட்சம், வெளிநாட்டுப்பிரயாணம், படுக்கை சுகம், ஆண்மைக்குறைவு மற்றும் உடலுறவு இன்பம் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
13. சாந்திக்காண்டம்
முற்பிறவியில் பிறந்த இடம், செய்த நன்மை தீமை, முற்பிறப்பில் செய்த பாவங்களால் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பம் மற்றும் துன்பத்தை நீக்குவதற்குண்டான தெய்வீக பரிகாரங்கள் போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
14. தீட்சைக்காண்டம்
தெய்வீக ஆற்றலைப்பெறுவதற்குண்டான மந்திரமுறைகளையும்; எதிரிகளின் தொல்லைகளிலிருந்து மீண்டு வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காக உடலில் அணிந்து கொள்ள வேண்டிய தெய்வீக எந்திரங்கள் மற்றும் இல்லத்தில் வைத்து பூசை செய்யவேண்டிய சித்தர் குளிகைகள்(ரசமணிகள்) போன்ற அம்சங்களின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
15.ஔடதக்காண்டம்
நோய்கள், நோய்களைத்தீர்க்கும் மூலிகை மருந்துகள், மருந்துகளை உட்கொள்ளும் விதங்கள், மற்றும் சித்தமருந்துகளை தயாரிக்கும் முறைகள் போன்றவைகளின் பலன்களைச்சொல்லும் குருநூல்.
16.திசாபுக்தி காண்டம்
நவகிரக திசைகள் மற்றும் புக்திகளின் காலங்களில் எற்படும் நன்மை தீமைகளின் பொதுப் பலன்களைச்சொல்லும் குருநூல்.
17.பொதுவாழ்வு (அரசியல்) காண்டம்
சமூகசேவை மற்றும் அரசியல் வாழ்க்கைப்பற்றிய பலன்களைச் சொல்லும் குருநூல்.
18. ஞான காண்டம்
யோக ஞான மார்க்கங்கள், முக்தி மார்க்கங்கள், தெய்வீக உபதேசங்கள், தெய்வீக தரிசனங்கள் மற்றும் தெய்வீக உதவிகள் பற்றிய பலன்களைச் சொல்லும் குருநூல்.
சிறப்புக்காண்டம்
19. பிரசன்ன பிரச்சனை காண்டம்
இக்காண்டத்தின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் பல்விதமான பிரச்சனைகளுக்கும், சந்தேகங்களுக்கும், கேள்விகள் மூலம் விடைகள் பெறலாம். ஒரு பிரசன்ன பிரச்சனை காண்டத்தில் அதிகபட்சம் மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கிடைக்கும்.