இலங்கையில் இடம்பெற்ற வன்முறையின் போது வேடிக்கை பார்த்த இராணுவ உடை அணிந்திருந்த நபரை அடையாளம் காண சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
துன்மோதர பகுதியில் இடம்பெற்ற வன்முறையின் சிசிடிவி காட்சி வெளியானது. குறித்த வீடியோவில் இராணுவ அதிகாரி உடை அணிந்த நபர் ஒருவர் வன்முறையை வேடிக்கை பார்க்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இக்காட்சி இணையத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், வீடியோ குறித்து இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், துன்மோதர வன்முறையை இராணுவ உடை அணிந்த நபர் வேடிக்கை பார்க்கும் காட்சி இராணுவத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இராணுவ அதிகாரி என சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் காண சிறப்பு விசாரணை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் குறித்த நபர் இராணுவத்தை சேர்ந்தவர் என தெரியவந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான தகவல்கள் இருந்தால் 112514280 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவளிக்கலாம் என தரைப்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.