மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நமது கைகளில் மட்டுமில்லை நம்முடைய சுற்றுப்புறத்தை சார்ந்தும் இருக்கிறது. விஷ்ணு புராணத்தில் கூறியுள்ளபடி செழிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நம்மை சுற்றியுள்ள தீய சக்திகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சாலைகளில் செல்வதை யாராலும் தவிர்க்க முடியாது. இந்த சூழ்நிலையில் சாலையில் இருக்கும் சில பொருள்களை கடந்து செல்வதும், தாண்டி செல்வதும் நமது வாழ்வில் துரதிர்ஷ்டத்தையும், துன்பத்தையும் உண்டாக்கும். இந்த பதிவில் சாலையில் நடக்கும் போது எந்தெந்த பொருட்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
தேங்கிய நீர்
நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சாலையில் நீர் தேங்கியிருப்பதை தாண்டி சென்றிருப்போம். அந்த நீர் மழையால் தேங்கியதாக இருக்காது. இந்த நீர் வடிகாலிலோ அல்லது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அசுத்தமான நீராக இருக்கும். இந்த நீரை தாண்டி செல்வது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். இந்த நீரின் மீது ஒருபோதும் காலை வைக்காதீர்கள்.
இறந்த விலங்குகள்
மிருகங்களோ அல்லது பறவைகளோ சாலையில் இறந்து கிடப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். அதனை யாரும் அப்புறப்படுத்தவோ அல்லது சுத்தம் செய்யவோ மாட்டார்கள். பெரும்பாலானோர் இவற்றை சுற்றி செல்வார்கள் சிலரோ எதையும் பற்றி கவலைப்படாமல் தாண்டியே செல்வார்கள். வேதங்களின் படி இறந்த உடல்களை தாண்டி செல்வது உங்கள் வாழ்க்கையில் பெரிய துன்பங்களை ஏற்படுத்தும். எனவே ஒருபோதும் இறந்த உடல்களை தாண்டியோ, மிதித்தோ செல்லாதீர்கள்.
முடி
சாலைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் நாம் முடி கீழே கிடப்பதை அடிக்கடி பார்க்க வாய்ப்புள்ளது. அதனை தாண்டியோ அல்லது மிதித்தோ செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது. இது உங்கள் உடலுக்குள் எதிர்மறை சக்திகளை கொண்டுவரும். முடியை பார்த்தால் உடனடியாக அதனை சுத்தம் செய்து விடுவது நல்லது.
சாம்பல்
புராணங்களில் கூறியுள்ளபடி யாகம் நடத்தி முடிந்த பிறகு அதிலிருந்து வரும் சாம்பலை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும். இதன் அர்த்தம் என்னவெனில் அனைத்து அசுத்தங்களும் தீயால் அழிக்கப்பட்டு அதனை ஓடும் நீரில் விடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டுவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் இந்த யாகம் மற்றும் பூஜை பொருட்களை சாலையில் எறிந்து விடுகின்றனர். இதனால் மிதிக்க நேர்ந்தால் அது உங்கள் வாழ்வில் பாவங்களை அதிகரிக்கும்.
புனித நூல்
நாம் சாலையில் பல சீரற்ற பொருட்கள் கிடப்பதை நாம் பார்த்திருப்போம். அவற்றில் பலவற்றை நாம் கண்டுகொள்ளாமல் மிதித்துக்கொண்டு செல்வோம். ஆனால் ஒருவேளை அதில் சாமிக்கயிறு அல்லது வேறு புனித நூல்கள் கிடந்தால் அவற்றை தாண்டி செல்லக்கூடாது. சாலையில் கிடக்கும் புனித நூல்களை காலால் மிதிப்பது பாவமாகும்.
பணம்
பணமோ, நாணயமோ சாலையில் கிடந்தால் நாம் பெரும்பாலும் அதனை எடுக்கத்தான் முயலுவோம். ஆனால் அதனை எடுக்கக்கூடாது. அதேசமயம் அதனை தாண்டியோ, மிதித்தோ செல்லக்கூடாது. ஏனெனில் இது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறு செய்வது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு கடுமையான பணக்கஷ்டத்தையும் ஏற்படுத்தும்.