இது பாட்டி வைத்தியம்!

0

நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவக் குணம் உண்டு. அதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்ததுவம் செய்து கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். உங்களுக்காக சில பிரத்யேக பாட்டி வைத்தியம் :வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவக் குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால், சில உபாதைகளை நாமே விரட்டிவிடலாம்.

ஆர்த்ரடிஸ் அம்பேல்!

வயதானவர்கள், நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு மூட்டு வலி ஒரு சாபக்கேடு. இவர்கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் கொஞ்சம் பட்டைத் தூளை சேர்த்து குழைத்து வலியுள்ள இடத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், வலி குறையும். இதேபோல ஒரு கப் சுடு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் பட்டைத் தூளை சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரடிஸ் குணமாகும்.

முடி கொட்டுதா?

ஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இப்போது வேலை மற்றும் மனஉளைச்சல் காரணமாக முடி அதிகமாக உதிர்கிறது. சிலருக்கு வைட்டமின் குறைப்பாட்டாலும் இப்பிரச்னை இருக்கும். இதை போக்க குளிக்கும் முன் காய்ச்சிய ஆலிவ் எண்ணையில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி உதிர்வது குறையும்.

தொற்றுநோயை துரத்துங்க!

சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் பட்டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகள் அழியும். தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பல்வலி காலி!

பல்வலிக்கு சிறந்த மருந்து பட்டை. ஒரு ஸ்பூன் பட்டைத் தூளை 5 ஸ்பூன் தேனுடன் கலந்து அதை வலியுள்ள பல்லில் தினமும் மூன்று முறை தடவி வந்தால் வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

கொழுப்பா?

உடலில் அதிகமாக கொழுப்பு சேர்வது நல்லதல்ல. அதனால் பல உபாதைகள் ஏற்படும். அதை கட்டுப்படுத்த 2 ஸ்பூன் தேன், 3 ஸ்பூன் பட்டைத் தூளை அரை டம்ளர் பால் கலக்காத டீ தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும். அதேபோல சுத்தமான தேனை சாப்பிட்ட பிறகு சாப்பாடு உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள்!
Next articleஎந்நேரத்தில் வெந்நீர் குடித்தல் அவசியம் !