முன்னோர்கள் கண்ட வைத்தியம் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்! “ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

0

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு.சர்க்கரைக்கு நல்ல மருந்து ஆவாரம் பூ ..!எத்தனை பேருக்கு தெரியும்..?

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பொன்னாவாரைப் பூ

தங்கப் பூ என்றும் அழைப்பார்கள். காரணம், இதில் மேனியைப் பொன்னாக்கும் தங்கச்சத்து மிகுந்துள்ளது.

தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்
மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம்
மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்
பூவைச்சேர் ஆவாரம் பூ
-அகத்தியர் குணவாகடம்

பொருள் – நீரிழிவு, வறட்சி, உடலின் வியர்வை நாற்றம் இவற்றைப் போக்கும். உடலுக்கு பொற்சாயலைக் கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ மிகுந்த பலனளிக்கக்கூடிய பூவாகும்.

பொன்னாவாரை பூ – 10 கிராம்

மிளகு – 5

திப்பிலி – 3

சுக்கு – 1 துண்டு

சிற்றரத்தை – 1 துண்டு

இவற்றை இடித்து பொடியாக்கி ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மறமறப்பு, உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்.

பொன்னாவாரைப் பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் வியர்வை நாற்றமும் மாறும்.

பொன்னாவாரைப் பூவுடன் பச்சை பயறு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் சர்க்கரை நோயினால் முழங்காலுக்குக் கீழே உண்டான சரும கருப்பு நீங்கி சருமம் பழைய நிலையை அடையும்.

உடல் எரிச்சல் தீரும்.

பொன்னாவாரைப் பூவை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு டீ.. காஃபிக்கு பதிலாக இதனை கஷாயம் செய்து பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.

பொன்னாவாவாரம் பூ ஆயுளை மட்டுமல்ல, அழகையும் காக்க வல்லது

நீரிழிவு நேயைக் கட்டுப்படுத்த அன்றே நம் சித்தர்கள் பல மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். அதில் ஆவாரம் பூவும் ஒன்று. ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்.

ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை சம அளவு எடுத்து, அரைத்து சருமத்தில் முழங்காலுக்குக் கீழே பூசி வந்தால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால் பகுதி உணர்ச்சிபெறும்.

மேனி பளபளக்க

ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மேனி தங்கம் போல் பளபளவென்று இருக்கும். சரும நோய்கள் ஏதும் அண்டாது.

கற்றாழை நாற்றம் மாற

சிலருக்கு வியர்வையில் கற்றாழை நாற்றம் கலந்து வீசும். இதனால் இவர்கள் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த கற்றாழை நாற்றத்திற்குக் காரணம் உடலில் உள்ள வியர்வைத் துளைகளில் படிந்துள்ள கிருமிகளே.

இவர்கள் ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் பனைவெல்லம், சுக்கு சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை டீ போல அருந்தி வந்தால் வாசனை திரவியம் இன்றி உங்கள் மேனி நறுமணம் வீசும்.

உடம்பில் உப்பொரிதல் மாற

சிலருக்கு உடம்பில் வியர்வை அப்படியே படிந்து உப்புப் படிவமாக மாறும். உடலெங்கும் வெள்ளைத் திட்டுக்களாக படிந்து இருக்கும். இவர்கள் ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் சீயக்காய் தூள் சேர்த்து குளிக்கும் முன் உடலெங்கும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடம்பில் உப்பொரிதல் மாறும்.

உடல் சூடு தணிய

உடல் சூட்டால் பித்தம் அதிகரித்து உடலில் இரத்தம் மாசடைந்து நோய்கள் பல ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த உடல் சூடு தணிய ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு படிப்படியாக குறையும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க

ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது.

ஆவாரம்பூவை காயவைத்து அதனுடன் சீயக்காய், சிறுபயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து கூந்தல் நீளமாக வளரும்.

வெள்ளைப்படுதல் உள்ள பெண்கள் ஆவாரம் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

ஆவாரம் பூவின் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆவாரம்பட்டையை எடுத்து உலர்த்திப் பொடித்து 20கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீரிலிட்டு 200மி.லியாகக் காய்ச்சி அந்தி சந்தி என இருவேளை குடித்துவர மதுமேகம் சிறுநீருடன் ரத்தம் கலந்து போதல் பெரும்பாடு ஆகியன தீரும்.

ஆவாரைப் பஞ்சகம் சூரணம் வெந்நீருடன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட மதுமேகம் என்கிற நீரிழிவு உடல் மெலிவு, உடலில் ஏற்படும் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகின குணமாகும்.

ஆவாரம் பூக்களை புதிதாகக் கொண்டு வந்து கூட்டாக செய்து உணவுக்கு பயன்படுத்துவதாலோ அல்லது உலர்த்தி சூரணித்து தேநீர் போலக் காய்ச்சி சாப்பிடுவதாலோ உடலின் சூடு, உடலின் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்குவதோடு உடலுக்கு பலத்தை தரும். நோய்களைத் தணிக்கும் உடலுக்கு பொன்னிறத்தை தரும்.

ஆவாரம் பூ, இலை இவை இரண்டையும் சேர்த்து உலர்த்தி பொடியாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலுக்கு தேய்த்துக் குளிக்க உடல் துர்நாற்றம் போகும். தோலும் மென்மையும் பளபளப்பும் பெறும்.

ஆவாரம் பூவை இரவு நேரத்தில் ஒரு டம்ளர் நீரில் போட்டு வைத்திருந்து காலை வெறும் வயிற்றில் அதன் தெளிவைக் குடித்து வருவதால் தோலுக்கு ஏற்பட்ட சொறி, சிரங்கு, தேமல் போன்ற துன்பங்கள் போகும்.

ஆவாரைப் பிசின் (இது நேரடியாக கிடைக்கப் பெறாவிடில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). கால் ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் நீரில் இட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் இருவேளை சில நாட்கள் குடித்து வர பெண்களின் வெள்ளைப் போக்கு குணமாகும். வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.

ஆவாரை இலையை நெய்யில் விட்டு வதக்கி ஆறவிட்டு கண்களை மூடியபடி இமைகளின் மீது ஆறவிட்டு கண்களை மூடியபடி இமைகளின் மீது பத்து நிமிடங்கள் போட்டு வைக்க கண் நோய்கள் குணமாகும் கண்களில் அழுக்கு வெளிப்பட்டு புளிச்சவாடை வருதல், கண்சிவப்பு, கண் எரிச்சல் ஆகியனவும் குணமாகும்.

தோல் வறட்சி ஏற்பட்ட போது ஆவாரைப்பட்டை, மஞ்சள் சிறிது கற்பூரம் ஆகியவற்றை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு உடல் முழுவதும் தேய்த்து வைத்திருந்து பின்னர் குளிக்க தோல் வறட்சி நீங்கி மென்மையும் நல்ல நிறமும் பெறும்.

ஆவாரைப் பஞ்சகத்தை இலை, பூ, பட்டை காய், வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி அளவு தினம் 3 வேளை உள்ளுக்கு சாப்பிட சோர்வு, மந்தநிலை மறைந்து சுறுசுறுப்பும் வீரியமும் உண்டாகும்.

எங்கு பார்த்தாலும் கிடைக்கும் ஆவாரை இலையோடு உளுந்த மாவை சேர்த்து அரைத்து மூட்டு வீக்கம், வலி ஆகியவற்றுக்குப் பற்றாகப் போட வீக்கம் தணிந்து வலியும் போகும்.

எங்கும் கிடைக்கும் எளிய மருந்தான ஆவாரம்பூவை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலில் இருந்து ஒரு நாளில் 2 லிட்டர் சளியை உற்பத்தி செய்யும் நுரையீரலை பாதுகாக்கும் அருமருந்து இதுதானாம்!
Next articleநோய்களுக்கு தீர்வு தரும் திருநீற்றுப் பச்சிலை…!இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!