பொள்ளாச்சி மாணவி பிரகதி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவி பிரகதி பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொலையை செய்த பிரகதியின் அத்தை மகன் சதீஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுவயதில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், எனக்கு திருமணமாகிவிட்ட போதிலும் காதல் தொடர்ந்த நிலையில், பிரகதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
மேலும், பிரகதிக்கு தேவையான பணம் மற்றும் நகை உதவிகள் அவ்வப்போது செய்துவந்தேன், இந்நிலையில் தான் எனக்கு அவள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் அவளை கொலை செய்துவிட்டேன் என கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?
மாணவி பிரகதி அரை நிர்வாண நிலையில் கிடந்ததால் சதீஸால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர் ஜெய்சிங் தலைமையிலான மருத்துவர்கள் நேற்று, 3 மணி நேரம் பிரேத பரிசோதனை நடத்தினர்.
இதில் மாணவியின் கழுத்தில் 2 கத்திக்குத்து காயமும், கையால் தடுத்ததால் அவரின் கை விரல் அறுபட்டிருந்ததும் தெரிந்தது. இதன்பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் முழுமையான அறிக்கைக்கு பின்பே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கருத்து
பிரகதியின் கொலை சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த கமல்ஹாசன், பிரகதியின் கொலை செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை விட கோபத்தை ஏற்படுத்துகிறது.
மக்களை விட நமக்கு எதுவும் முக்கியம் கிடையாது. அவர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியுள்ளார்.